Home News உஷார்! 5G சேவை பெயரில் மோசடி

உஷார்! 5G சேவை பெயரில் மோசடி

இந்தியாவில் கடந்த வாரம் இந்தியன் மொபைல் காங்கிரஸ் 2022 இல் 5G மொபைல் நெட்வொர்க் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வாரம், ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை தங்கள் வெளியீடு திட்டங்களையும், இந்தியா முழுவதும் 5G இன் ஆரம்ப வெளியீட்டிற்கு தகுதியான நகரங்களின் ஆரம்ப பட்டியலையும் அறிவித்துள்ளன. இந்தியா முழுவதும் 5ஜி போன்களை வைத்திருக்கும் மக்கள் தங்கள் போன்களில் 5ஜியின் ஆற்றலையும் வேகத்தையும் அனுபவிக்க ஆர்வமாக உள்ள நிலையில், ஹைதராபாத் சைபர் க்ரைம் பிரிவு ஒரு புதிய மோசடி குறித்து எச்சரித்துள்ளது.

மோசடி

அறிக்கையின்படி, மோசடி செய்பவர்கள் அப்பாவி மக்களுக்கு அழைப்புகளை விடுத்து, அவர்களது போனை 4ஜி இணைப்பில் இருந்து 5ஜி இணைப்பிற்கு மாற்றித் தருவதாகக் கூறி அனுப்பப்படும் இணைப்புகளைக் கிளிக் செய்த பிறகு பயனர் தங்கள் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை இழந்ததற்காகப் பல புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது மிகவும் மோசமான மோசடியாக இருப்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆகையால், 5G மோசடியில் இருந்து விலகி இருங்கள்.

பாதிப்பு

சில மோசடி செய்பவர்கள் பயனர்களின் போன்களுக்கு ஆபத்தான இணைப்பை அனுப்புகிறார்கள். அதாவது ஒரு லிங்க்-ஐ அனுப்புகிறார்கள். இது பயனர்களுக்கு 4G இலிருந்து 5G நெட்வொர்க் அப்டேட் செய்ய உதவுவதாகக் கூறுகிறது. 5ஜியின் சுவையை ருசிக்கத் துடிக்கும் பொதுமக்கள், இது ஏதோ அதிகாரப்பூர்வ செய்தி என்று நினைத்து இந்த இணைப்பை கிளிக் செய்கிறார்கள்.
இந்த லிங்க் உங்கள் போனில் உள்ள டேட்டாவை ஹேக் செய்ய அனுமதிக்கிறது. இதன் மூலம் ஹேக்கர்கள் உங்கள் போனில் உள்ள தகவலைத் திருடுகிறார்கள். இணைப்பைக் கிளிக் செய்தவுடன், குற்றவாளிகள் வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்ட தொலைப்பேசி எண்ணை அறிந்தவுடன், அவர்கள் தொலைப்பேசி எண்ணைத் தடுத்து, சிம்மை மாற்றிக்கொள்கிறார்கள். இதன் விளைவாக மக்கள் தங்கள் சொந்த சிம்மிற்கான அணுகலை இழக்கிறார்கள்.

கவனம் தேவை

இதன் காரணமாகப் பல பயனர்கள் சைபர் குற்றவாளிகள் தங்கள் தொலைப்பேசியின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்டதாகப் புகார் அளித்துள்ளனர். அறிமுகமில்லாத எண் அல்லது அனுப்புநரிடமிருந்து “4G இலிருந்து 5G-க்கு மாறுங்கள்” என்று வரும் எந்த செய்தியையும் கிளிக் செய்ய வேண்டாம் என்று சைபர் பிரிவு பயனர்களை எச்சரித்துள்ளது. சிம் வழங்குநரின் அதிகாரப்பூர்வ தளத்தில் சரியான விவரங்களைப் பார்ப்பது எப்போதும் நல்லது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் 5ஜி மற்றும் ஜியோ 5ஜி

ஏர்டெல் 5ஜி பிளஸ் திட்டம் இப்போது இந்தியாவின் டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், சிலிகுரி, நாக்பூர் மற்றும் வாரணாசி ஆகிய 8 நகரங்களில் பயன்பாட்டில் உள்ளது. ஜியோ பயனர்களுக்கு, 5G சோதனைகள் டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் வாரணாசியில் தொடங்குகிறது. இந்த நகரங்களில் உள்ள பயனர்கள் 5ஜி சேவைக்கு மாற நினைத்தால், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ ஸ்டோர்களுக்குச் சென்று மட்டும் விண்ணப்பிக்கவும். இதிலும் குறிப்பிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே 5ஜி சேவை வழங்கப்படுகிறது. மற்ற நகரங்களில் உள்ளவர்களுக்கு இன்னும் 5ஜி சேவை வழங்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளவும்.