BYD Atto 3 எலெக்ட்ரிக் காரின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. சீனாவைச் சேர்ந்த முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான பிஒய்டி, அதன் புதிய எலெக்ட்ரிக் காரான அட்டோ 3-ஐ இந்தியாவில் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் அவ்வப்போது டீசர் படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றது.
வரும் அக்டோபர் 11 ஆம் தேதி இந்தக் கார் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. ஏற்கனவே இந்த தகவல் வதந்தியாக பரவி வந்த நிலையில் தற்போது பிஒய்டி நிறுவனம் அதிகாரப்பர்வமாக இந்த நாளை உறுதிப்படுத்தியுள்ளது. இதனையடுத்து, இன்னும் பத்து நாட்களில் பிஒய்டி-இன் புதுமுக எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகமாக இருப்பது உறுதியாகியுள்ளது.
பிஒய்டி நிறுவனத்தின் இந்தியாவிற்கான இரண்டாவது தயாரிப்பு இது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஏற்கனவே இந்நிறுவனத்தின் இ6 எனும் எலெக்ட்ரிக் எம்பிவி ரக கார் இந்தியாவில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் காரை முன்னதாக வாடகை வாகன சேவை நிறுவனங்களுக்கு மட்டுமே விற்பனைக்கு அளித்து வந்த நிலையில், அண்மையில் தனிநபர் பயன்பாட்டாளர்களும் இக்காரை வாங்கிக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிட்டது.
இந்த அறிவிப்பை அடுத்து நிறுவனம் நாடு முழுவதும் ஷோரூம்களை திறக்கும் பணியில் களமிறங்கியிருக்கின்றது. இந்த பணிகளைத் தொடர்ந்து புதுமுக வாகனங்களைக் களமிறக்கும் பணியிலும் அது தீவிரம் காட்டத் தொடங்கியிருக்கின்றது. ஆகையால், பிஒய்டி அட்டோ 3 காரைத் தொடர்ந்து இன்னும் சில புதுமுக வாகனங்களையும் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதிக பிரீமியம் அம்சங்கள் கொண்ட வாகனமாகவே பிஒய்டி அட்டோ 3 கார் விற்பனைக்கு வர இருக்கின்றது. அதிக அடர்த்தியான ஒற்றை ஸ்லேட் ஸ்டைலிலான குரோம் கிரில், ட்வின் பாட் எல்இடி புரஜெக்டர் ரக ஹெட்லேம்ப்புகள், டூயல் டோன் பம்பர், டிஸ்க் பிரேக்குகள் என பல்வேறு அலங்காரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.
காரின் தோற்றத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட், 18 அங்குல டூயல் டோன் அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்டுகள், இன்டெக்ரேட்டட் ஸ்பாய்லர் மற்றும் ஷார்க் ஃபின் ஆன்டனா ஆகியவை வழங்கப்பட்டிருக்கின்றன.
இதுமட்டுமின்றி, ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதிக் கொண்ட 12.8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, ஒயர்லெஸ் சார்ஜிங், ஏர் ப்யூரிஃபையர், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ஐந்து அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் உள்ளிட்ட தொழில்நுட்ப கருவிகளும் அட்டோ 3 எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.
இந்த காரில் என்ன மாதிரியான மின் மோட்டார் மற்றும் பேட்டரி வழங்கப்பட இருக்கின்றது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. தற்போது சர்வதேச சந்தையில் இதே அட்டோ 3 எலெக்ட்ரிக் காரானது ஸ்டாண்டர்டு மற்றும் எக்ஸ்டெண்ட் ரேஞ்ஜ் எனும் இரு வேரியண்டுகளில் அது விற்பனைக்குக் கிடைக்கின்றது.
இவையிரண்டிலும் வெவ்வேறு விதமான பேட்டரி பேக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதாவது, ஸ்டாண்டர்டு வேரியண்டு 49.92 kWh பேட்டரி பேக்கிலும், எக்ஸ்டெண்ட் வேரியண்டில் 60.48 kwh பேட்டரி பேக்கும் வழங்கப்பட்டுள்ளது. இவை ஓர் ஃபுல் சார்ஜில் 345 கிமீ தொடங்கி 420 கிமீ வரையில் ரேஞ்ஜ் தரும். பேட்டரி பேக்கில் வித்தியாசத்துடன் காணப்படும் இந்த வேரியண்டுகளில் ஒரே மாதிரியான திறனை வெளியேற்றக் கூடிய பேட்டரி பேக்கே வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன், 204பிஎஸ் இ-மோட்டாரே இந்த காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 150 பிஎச்பி மற்றும் 310 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இத்துடன், 7.3 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறனையும் இந்த மோட்டார் வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.







