4ஜி விலைக்கே 5ஜி கிடைக்க வாய்ப்பு! வல்லுனர்கள் கணிப்பு

Highlights

  • இந்திய மொபைல் காங்கிரஸ் (Indian Mobile Congress) மாநா அக்டோபர் 1 ஆம் தேதி நடக்க  இருக்கிறது
  • இதில், பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் 5ஜி நெட்வொர்க்கை (5G Network) அறிமுகம் செய்ய உள்ளார்!

5ஜி சேவைகள் அறிமுகமாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், 5ஜி கட்டணம் குறித்த “ஒரு நம்ப முடியாத” தகவல் வெளியாகி உள்ளது! முன்னதாக வெளியான தகவல்கள், 5ஜி திட்டங்களின் விலை நிர்ணயம் ஆனது 4ஜி திட்டங்களை விட சுமார் 20% அதிகமாக இருக்கும் என்றே கூறின. ஆனால் தற்போது கிடைத்துள்ள ஒரு தகவலின்படி, 5ஜி ரீசார்ஜ்களின் விலை நிர்ணயமானது 4ஜி-யை போலவே இருக்கலாம் என்கிறது!

4ஜி விலையிலேயே 5ஜி

இதன்படி, பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய இரண்டுமே தங்கள் 5ஜி ரீசார்ஜ்களை 4ஜி திட்டங்களைப் போலவே விலை நிர்ணயம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டுமே தத்தம் 5ஜி பேக்குகளின் விலை விவரங்கள் குறித்து எந்த ஒரு பொது அறிக்கையும் வெளியிடவில்லை என்றாலும் கூட, அவைகள் 4ஜி பேக்குகளின் விலையிலேயே தான் இருக்கும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

5ஜி திட்டங்களின் விலை நிர்ணயம் ஆனது 4ஜி-யை போலவே இருப்பதற்கு பின்னால், ஒரு வியாபார தந்திரம் உள்ளது. அது என்னவென்றால், ஏற்கனவே 4ஜி திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் அதே விலையில் 5ஜி திட்டங்களும் கிடைக்கும் பட்சத்தில், பெரும்பாலான வாடிக்கையாளர்கள் சீக்கிரத்திலேயே 5ஜி சேவைக்கு மாறுவார்கள்.

அதிக கட்டணம் இருக்காது

அனாலிசிஸ் மேசனின் இந்திய தலைவர் ஆன, ரோஹன் தமிஜாவும் கூற்றுப்படி, ஜியோ, ஏர்டெல் போன்ற டெலிகாம் நிறுவனங்கள் ஆரம்பத்திலேயே 4ஜி கட்டணத்தை விட அதிகமான பணத்தை வசூலிக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அவர்களின் முக்கிய இலக்கு – உடனே அனைவரும் 5ஜி சேவையை தத்தெடுக்க வேண்டும் என்பதே ஆகும். இந்நிறுவனங்களின் முதல் வேலை, அதிக எண்ணிக்கையிலான நுகர்வோரை மிகவும் வேகமான 5ஜி சேவைக்கு பழக்கப்படுத்துவதே ஆகும்!

5ஜி திட்டங்களை வழங்க, 5ஜி ஸ்மார்ட்போன் பிராண்டுகள் ஆனது டெலிகாம் நெட்வொர்க்குகளுடன் கூட்டு சேரக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 5ஜி கனெக்டிவிட்டியை ஆதரிக்கும் ஸ்மார்ட்போன்களின் தேவை, மிகப்பெரிய அளவில் வளர உள்ளதால், மொபைல் பிராண்டுகள் மற்றும் டெலிகாம் நிறுவனங்களின் இந்த கூட்டணி சற்றே அர்த்தமுள்ளதாக தெரிகிறது!

ஜியோ 5ஜி மொபைல்

எகனாமிக் டைம்ஸ் வழியாக வெளியான ஒரு (கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச்) அறிக்கையின்படி, 5ஜி நெட்வொர்க்கின் அறிமுகத்தை தொடர்ந்து, ஜியோ நிறுவனம், ரூ. 8,000 முதல் ரூ. 12,000 க்குள் ஒரு புதிய 5G ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது!

அந்த ஜியோ 5ஜி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் என்பது குறித்தும் ஒரு வதந்தி பரவி வருகிறது.

  • 1600×720 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்
  • 6.5 அங்குல எச்டி+ ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 சிப்செட்
  • 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ்
  • மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவு
  • கூகுளின் ஆண்ட்ராய்டு 11 (கோ எடிஷன்) ஓஎஸ்
  • 13MP + 2MP டூயல் ரியர் கேமரா செட்டப்
  • 8MP செல்ஃபி கேமரா
  • 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்
  • 5,000mAh பேட்டரி

முன்னரே குறிப்பிட்டபடி, இந்தியாவில் 5ஜி நெட்வொர்க் ஆனது வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும். அதனை தொடர்ந்து, ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டுமே கூடிய விரைவில் அதன் 5ஜி சேவைகளைத் துவங்கும். இப்படியாக வருகிற 2023 ஆம் ஆண்டின் இறுதியில், நாடு முழுவதும் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் 5ஜி சேவைகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.