வருகிற 2023 ஆம் ஆண்டு வரை, நீங்கள் 5ஜி ஸ்மார்ட்போனை (5G Smartphone) வாங்க வேண்டிய அவசியமே இல்லை என்பதற்கு ஒரு காரணம் அல்ல.. மொத்தம் மூன்று காரணங்கள் உள்ளன! அதென்ன காரணங்கள்.. பார்க்கலாம்.
இந்தியாவில் 5ஜி சேவைகள் அறிமுகமாகி விட்டது என்கிற காரணத்தினாலும், எல்லாருமே 5ஜி போன்களை வாங்குகிறார்கள், அதனால் நானும் ஒன்று வாங்க போகிறேன் என்பது தான் உங்கள் காரணம் என்றால் கொஞ்சம் பொறுங்கள்! உண்மை என்னவென்றால், வருகிற 2023 ஆம் ஆண்டு வரை 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க வேண்டிய அவசியம் இல்லை.
காரணம் 01: கவரேஜ்
ஒரு புதிய 5ஜி போனிற்காக குறைந்த பட்சம் ரூ.15,000-ஐ செலவழிக்கும் முன் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் – 5ஜி கவரேஜ்! ஏனென்றால், 5ஜி நெட்வொர்க் ஆனது தற்போது இந்தியாவில் ஒரு சில பகுதிகளில் மட்டுமே கிடைக்கிறது. அது ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் கிடைக்க, இன்னும் ஓரிரு வருடங்கள் ஆகலாம்!
நீங்கள் வசிக்கும் பகுதி ஆனது டயர் I அல்லது டயர் II நகரமாக இல்லாவிட்டால், நீங்கள் 5ஜி கவரேஜை பெறுவதற்குள், நீங்கள் வாங்கிய புதிய 5ஜி போன் ஆனது, பழையதாகி விடும்; அது அப்டேட் சுழற்சிகளுக்கு அப்பாற்பட்ட போனாகக் கூட மாறலாம். எனவே ஒரு புதிய 5ஜி ஸ்மார்ட்போனை வாங்குவதற்கு முன், நீங்கள் வசிக்கும் பகுதியில் அல்லது வேலை செய்யும் பகுதியில் 5ஜி சேவை எப்போது கிடைக்கும் என்று விசாரியுங்கள். அடுத்த சில மாதங்களில் வரும் என்றால் வாங்குங்கள். இல்லை என்றால் வேண்டாம்!
காரணம் 02: விலை
விலை பொதுவாகவே 5G போன்களின் விலை நிர்ணயம் அதிகமாகத்தான் இருக்கும். தற்போதைக்கு நீங்கள் ரூ.15,000-ஐ எடுத்து வைத்தால் தான் ஒரு நல்ல 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க முடியும். ஆனால் நீங்கள் உற்று கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால்.. இங்கே 5ஜி போன்களின் விலை மட்டுமே உயர்வாக இருக்கப்போவதில்லை. இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் 5ஜி சேவைகள் அறிமுகமானதும், 5ஜி திட்டங்களின் உண்மையான விலை நிர்ணயங்கள் அறிவிக்கப்படும். அப்போது அதிவேக 5ஜி டேட்டாவுக்கான கட்டணங்கள் கண்டிப்பாக அதிகமாகத் தான் இருக்கும். 5ஜி நெட்வொர்க், 5ஜி போன்கள் மற்றும் 5ஜி திட்டங்கள் என எல்லாமே உங்களுக்கும் உங்கள் பட்ஜெட்டிற்கும் கட்டுப்படி ஆகும்வரை தொடர்ந்து 4ஜி நெட்வொர்க்கையும், 4ஜி போன்களையும் பயன்படுத்தவும். ஏனென்றால், 5ஜி அறிமுகத்திற்கு பின்னால், 4ஜி நெட்வொர்க்கும் தொடர்ந்து கிடைக்கும்.
காரணம் 03: செயல்திறன்
5ஜி வந்ததும் 4ஜி-ஐ குறைத்து மதிப்பிட கூடாது. 4ஜி ஸ்மார்ட்போன்கள் ஆனது எதிர்காலத்திற்கு ஏற்ற விருப்பமாக இல்லாவிட்டாலும் கூட, அது இன்னும் சக்திவாய்ந்ததாகவே உள்ளன. அதாவது ஒரே விலையில் கிடைக்கும் ஒரு 5G போனையும், 4ஜி ஸ்மார்ட்போனையும் ஒப்பிட்டு பார்த்தால்.. செயல்திறனில் பெரிய வித்தியாசங்கள் இருக்காது! உதாரணமாக.. போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ரூ. 20,000 க்கு குறைவான விலையில் வாங்க கிடைக்கும் ஒரு “பழைய” 4G போன் ஆகும், இது Snapdragon 860 உடன் வருகிறது. இந்த சிப்செட், 5ஜி கனெக்டிவிட்டியை வழங்கக்கூடிய புதிய 5ஜி சிப்பை விட மிகவும் சக்திவாய்ந்த சிப்செட் ஆகும். ஆக உங்களின் கவனம் 5ஜி மீது அல்ல.. பெர்ஃபார்மென்ஸ் மீது மட்டுமே உள்ளதென்றால் 5ஜி போன் வாங்குவதை தள்ளிப் போடுவது நல்லது.






