
கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. இதனிடையே இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இடம் பொருள் ஏவல் என்ற படம் தொடங்கப்பட்டு நீண்ட நாட்களாகியும் வெளிவராமல் இருந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உருவான இப்படம், நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது திரைக்குவர உள்ளதாக சீனு ராமசாமி நேற்று அறிவித்தார்.
யுவன் சங்கர் இசை
இடம் பொருள் ஏவல் இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து விஷ்ணு விஷால் மற்றும் நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள வைய்யம்பட்டி வல்லக்குட்டி என்ற பாடலின் லிரிக்கல் வீடியோவை பகிர்ந்து சமூக வலைத்தளத்தில் சீனு ராமசாமி பதிவிட்டுள்ளார். அதில், பறவைகள் எச்சந்தான் காடு எங்க பண்பாட்டில் காடேதான் வீடு என்று குறிப்பிட்டுள்ளார்.
வாழ்த்து மடல்
இடம் பொருள் ஏவல் இடம் பொருள் ஏவல் சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான மாமனிதன் திரைப்படம் பல விருதுகளை குவித்தது குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இயக்குனர் சீனுராமசாமி சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு பிறந்தநாள் பரிசாக அவரது மனைவி இவரின் கவிதைகள் அனைத்தையும் தொகுத்து நூலாக்கி கொடுத்துள்ளார். இதற்கு தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து மடல் எழுதியுள்ளார்.
இது குறித்து சீனுராமசாமி தனது சமூக வலைதளப் பக்கத்தில் “அனைவருக்கும் அன்பான வணக்கம் எழுதுவது சீனுராமசாமி. எனக்கு ஆச்சர்ய பரிசு தர இது நாள்வரை நான் எழுதிய கவிதைகள் அத்துணையும் சேகரித்து எனக்குத் தெரியாமல் நூலாக்கி ‘சொல்வதற்கு சொற்கள் தேவையில்லை’ என அந்நூலுக்கு என் கவிதையையே தலைப்பிட்டு பிறந்தநாள் பரிசாக மனைவி தர்ஷணாவும் மகள்களும் தந்தனர்.
பாராட்டுக் கடிதம்
மாண்புமிகு நம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒரு கணவனுக்கு ஆச்சர்யமூட்டும் பரிசு தருவதற்காக ஒரு மனைவி தொகுத்த கவிதை தொகுப்பிற்கு ஊக்கமளித்து பாராட்டி ஒரு கடிதம் தந்து வாழ்த்திய உங்கள் உயர்ந்த உள்ளம் பற்றி நினைப்பதா? அல்லது என் போன்ற கலைஞர்களுக்கு நீங்கள் தரும் இதயப்பூர்வமான அன்பை எண்ணி நெகிழ்வதா எனத் தெரியவில்லை.
வைரமுத்து
என்னால் இதை முதலில் நம்ப முடியவில்லை. முதல்வரின் கனிந்த இதயத்திற்கு முன் வணங்கி நிற்கிறேன். மேலும் அணிந்துரை தந்தவர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்.. கவிஞரும் தன் பங்களிப்பாக ஆயிரம் மலர்களை சொற்களாக்கி சூடிவிட்டார். உங்கள் கருத்த கைகளை முத்தமிடுகிறேன் கவிஞரே.. கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் அம்மா, எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் சத்யபாமா பல்கலைக்கழக வேந்தர் மரிய சீனாஜான்சன் என் வாழ்நாளில் சிறப்பான நினைவு பரிசினை தந்த உங்களுக்கு இதய நன்றிகள். நூலினை வீட்டிற்கே வந்து வெளியிட்டவர் நடிகர் மோகன் அவர்கள் அதுவும் தீடீரென்று.. என் காதலுக்குரியவர் அவர் மோகன் சாருக்கு இதய நன்றிகள். ஆச்சர்யம் அதிர்ச்சியாயிற்று. திக்குமுக்காடிப்போனேன். வாழ்த்திய அனைவருக்கும் அன்பு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.





