
ஆண்டுக்கு ஒரு கோடி ஸ்கூட்டரை தயாரிக்கும் மெகா திட்டம் இருப்பதாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் நிறுவனரும் மற்றும் தலைமை செயல் அதிகாரியுமான பாவிஷ் அகர்வால் வெளியிட்ட அறிவிப்பின் மூலம் போட்டியாளர்களின் அடி வயிறை கலங்க வைத்துள்ளார். இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது. பெட்ரோல் விலை மிகவும் அதிகமாக இருப்பது இதற்கு மிக முக்கியமான காரணமாக கருதப்படுகிறது. இதுதவிர சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக அதிகரித்து வரும் விழிப்புணர்வும், மக்களை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை நோக்கி நகர வைத்துள்ளது.
ஓலா ஸ்கூட்டர் வேரியண்ட்கள்
இந்தியாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையை பொறுத்தவரையில், ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. எஸ்1 (S1), எஸ்1 ப்ரோ (S1 Pro) மற்றும் எஸ்1 ஏர் (S1 Air) ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் விற்பனை செய்து கொண்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு அமோக ஆதரவை வாடிக்கையாளர்கள் வழங்கி வருகின்றனர்.
உற்பத்தியை அதிகரிக்க முடிவு
எனவே ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. அத்துடன் தனது தொழிற்சாலையின் திறனை அதிகரிப்பதற்கும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் நிறுவனரும் மற்றும் தலைமை செயல் அதிகாரியுமான பாவிஷ் அகர்வால் இந்த தகவலை தற்போது தெரிவித்துள்ளார்.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தொழிற்சாலை தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் இந்த தொழிற்சாலையில் ஏற்கனவே ஒரு நாளைக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாக பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். இதை மேலும் அதிகரிப்பதற்கு ஓலா எலெக்ட்ரிக் திட்டமிட்டுள்ளது. எதிர்காலத்தில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு தற்போது இருப்பதை காட்டிலும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலை
எனவே எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு, தனது தொழிற்சாலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விரைவாக டெலிவரி கொடுக்க முடியும். தற்போதைய நிலையில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தொழிற்சாலையில் ஒரு ஆண்டுக்கு 20 லட்சம் எலெக்ட்ரிக் டூவீலர்களை தயாரிக்க முடியும். கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவடைந்த பிறகு, இந்த தொழிற்சாலையின் உற்பத்தி திறன் ஒரு ஆண்டுக்கு 1 கோடி எலெக்ட்ரிக் டூவீலர்களாக இருக்கும்.
குறைந்த விலையில் ஓலா ஸ்கூட்டர்
உற்பத்தி திறனை அதிகரிப்பதுடன், தனது தயாரிப்புகளின் எண்ணிக்கையையும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அதிகரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக எஸ்1 ஏர் என்ற புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விற்பனைக்கு வந்துள்ள இந்த புதிய மாடலின் விலை 79,999 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க வேண்டும் என நினைத்து கொண்டிருப்பவர்களுக்கு இது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிய ஓலா எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2.5kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளது. ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் வரும் காலங்களில் எலெக்ட்ரிக் பைக்குகளையும் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. இதுதவிர ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்திடம் இருந்து எலெக்ட்ரிக் கார்களும் கூட வரவிருக்கின்றன. எனவே வரும் காலங்களில் இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனமாக மாறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கின்றன.
போட்டி நிறுவனங்கள்
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ஏத்தர் எனர்ஜி, டிவிஎஸ் மற்றும் பஜாஜ் ஆகிய நிறுவனங்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் போட்டியாக இருக்கின்றன. இதுதவிர இன்னும் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் கால்தடம் பதிக்க தயாராகி வருகின்றன.





