
iPhone 15 மாடல் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இப்போதிலிருந்தே iPhone 15 தொடர்பான செய்திகள் இணையத்தைத் தாக்கிக்கொண்டுள்ளன. அந்த வரிசையில், சமீபத்தில் வெளியான ஒரு தகவலை iPhone பயனர்களை வியப்படையச் செய்துள்ளது. இதுவரை வெளியான எல்லா வகையான iPhone மாடல்களிலும் நிறுவனம் அதன் பிரத்தியேக லைட்னிங் போர்ட்டைத் தான் சார்ஜிங்கிற்காக பயன்படுத்தி வந்தது. ஆனால், வரவிருக்கும் iPhone 15 போன்களில் இந்த லைட்னிங் சார்ஜிங் போர்ட்களை ஆப்பிள் நீக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்குப் பதிலாக, நிறுவனம் அதன் வரவிருக்கும் iPhone 15 தொடர்களில் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்களை (USB Type-C) பயன்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. ஐபோனில் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் இருக்க வேண்டும் என்பது சிலரின் விருப்பமாக இருந்து வந்தது!
ஆப்பிள் அதன் அடுத்த வரிசையான ஐபோன்களில் லைட்டிங் போர்ட்டை, USB டைப்-சி போர்ட்டுடன் மாற்றலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Cupertino-giant, அதன் ஸ்மார்ட்போன்களில் USB Type-C போர்ட்டைச் சேர்க்கும் யோசனையில் மகிழ்ச்சியடையவில்லை, மாறாக அது EU சட்டத்திற்கு இணங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது தான் உண்மையான காரணமாகும்.
2024 ஆம் ஆண்டிற்குள் அனைத்து ஃபோன்களிலும் USB Type-C போர்ட் இருக்க வேண்டும் என ஐரோப்பிய சட்டம் கட்டாயப்படுத்தியுள்ளது. மற்றவற்றிலிருந்து வேறுபட்ட சார்ஜிங் போர்ட்டை உள்ளடக்கிய ஒரே ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Apple, EU சட்டத்திற்கு இணங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறியுள்ளது. இதனால், வரவிருக்கும் ஆண்டில் iPhone 15 தொடர் மாடல்களில் இருந்து அடுத்து வரவிருக்கும் ஐபோன் 16 (iPhone 16) மற்றும் பிற மாடல்களில் இனி லைட்னிக் போர்ட் இருக்காது.
இந்த திடீர் மற்றம் குறித்து ஆப்பிள் நிறுவனம் என்ன சொல்கிறது? “வெளிப்படையாக, நாம் இதற்கு இணங்க வேண்டும்; எங்களுக்கு வேறு வழியில்லை,” என்று ஆப்பிளின் மூத்த அதிகாரி கிரெக் ஜோஸ்வியாக் கூறியுள்ளார். ஐரோப்பிய யூனியனின் கூற்றுப்படி, அனைத்து மொபைல் போன்கள் மற்றும் டேப்லெட்டுகள் 2024-ல் முழுமையாக USB-C போர்டை மட்டுமே கொண்டிருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, ஆப்பிள் இந்த மாற்றத்தை மேற்கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஐரோப்பாவில் வெளியிடப்படும் அனைத்து ஐபோன்களும் USB Type-C போர்ட்டுடன் வரும் என்பதை ஜோஸ்வியாக் உறுதிப்படுத்தினாலும், ஐரோப்பாவிற்கு வெளியே உள்ள ஐபோன்கள் USB Type-C போர்ட் பெறுமா இல்லையா என்பது பற்றிய எந்த தகவலையும் அவர் வெளியிடவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய சட்டத்தின் மீது ஆப்பிள் நிறுவனத்தின் அதிருப்தி குறித்து ஜோஸ்வியாக் குரல் கொடுத்தார்.
லைட்டிங் போர்ட்டை டைப்-சி போர்ட்டுடன் மாற்றினால் ஏராளமான மின் கழிவுகள் உருவாகும் என்று அவர் வலியுறுத்தினார். இருப்பினும், யூ.எஸ்.பி டைப் சி போர்ட் கொண்ட ஐபோன்கள் பயனர்களின் துயரங்களை முடிவுக்குக் கொண்டு வரும் என்று ஐரோப்பிய அரசாங்கம் தெரிவிக்கிறது. இது நடைமுறைப்படுத்தப்பட்டால், ஆண்ட்ராய்டு போன்கள் உள்ளவர்களிடம் இருந்து பயனர்கள் சார்ஜர்களை கடன் வாங்க முடியும். ஆனால், இப்போதைய ஐபோன் பயனர்களுக்கு இது சாத்தியமில்லை.
ஆண்ட்ராய்டு பயனர்களுடன் ஒப்பிடும்போது ஐபோன் பயனர்களின் எண்ணிக்கை எப்போதும் குறைவாகவே இருக்கிறது. 10 மக்கள் இருக்கும் இடத்தில் 7 அல்லது 8 ஆண்ட்ராய்டு பயனர்கள் மற்றும் 2-3 ஐபோன் பயனர்கள் மட்டுமே இருக்கிறார்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், நீங்கள் ஐபோனின் சார்ஜரை எடுத்துச் செல்லவில்லை என்றால், சார்ஜரைக் கடனாகப் பெற்று சார்ஜ் செய்ய முடியாது. இந்த சிக்கலைச் சமநிலைப்படுத்த ஐரோப்பா இது போன்ற சட்டத்தை இயற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.
எல்லா ஃபோன்களையும் போலவே ஐபோனிலும் சார்ஜிங் போர்ட் இருந்தால், அது விஷயங்களை மிகவும் எளிதாக்கிவிடும் என்று நம்பப்படுகிறது. சமீபத்திய தலைமுறை iPad-கள் மற்றும் லேப்டாப்களில் தற்போது USB Type C போர்ட்களோடு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.





