உத்தம வில்லன் படத்தின் தோல்விக்கும் நஷ்டத்துக்கும் ஈடுசெய்ய கமல்ஹாசன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சினிமாவில் பல வித்தியாசமான முயற்சிகளை கையிலெடுக்கும் கமல்ஹாசன், 2015ல் உத்தம வில்லன் படத்தில் நடித்திருந்தார். கமலும் கிரேசி மோகனும் இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை எழுத, ரமேஷ் அரவிந்த் இயக்கினார். கமலுடன் பூஜா குமார், ஊர்வசி, கே பாலச்சந்தர், நாசர், ஆண்ட்ரியா, ஜெயராம், பார்வதி ஆகியோர் நடித்திருந்தனர். நெகட்டிவான விமர்சனங்களால் மிகப் பெரிய தோல்வியை சந்தித்த உத்தம வில்லன், பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் செய்ய முடியாமல் தடுமாறியது. இதனால் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நஷ்டம் அடைந்ததாக சொல்லப்பட்டது.
உத்தம வில்லன்
உத்தம வில்லன் தோல்வியால் தயாரிப்பாளர் லிங்குசாமியின் நிலை மிக மோசமானதாக அப்போது செய்திகள் வெளியாகின. மேலும், பலகோடி ரூபாய் நஷ்டத்தால் ஏராளமான கடனில் சிக்கி அவர் கஷ்டப்படுவதாகவும் பேச்சுகள் எழுந்தன. இந்நிலையில், இதுகுறித்து சில வாரங்களுக்கு முன்னர் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் லிங்குசாமி வெளிப்படையாக பேசியிருந்தார். அதில், ‘ஆனந்தம்’ படத்திற்குப் பிறகு ‘மதி’ என்ற டைட்டிலில் ஒரு கதை எழுதியிருந்தேன். அது கமல் சாருக்காக எழுதியது தான், ஆனால் அப்போது அந்த கதையை படமாக எடுக்க முடியாமல் போனது. அதே கதையை மீண்டும் எழுதிக்கொண்டு இருக்கிறேன். அதில் கமல் சார் கண்டிப்பாக நடிப்பார் என நம்பிக்கைத் தெரிவித்து இருந்தார்.
கமல் – லிங்குசாமி கூட்டணி
அதேபோல் உத்தமவில்லன் படத்தின் தோல்வி பற்றியும் அவர் பேசியிருந்தார். “உத்தம வில்லன் படத்தின் தோல்விக்கு கமல் எனும் மகா கலைஞன் மீது பழி போடாதீர்கள். அவர் கூட படம் பண்ணதே எங்களுக்கு பெரிய விஷயம். எங்க நிறுவனம் இப்படி ஆனதுக்கு அவர் தான் காரணம்னு நான் சொல்லவே மாட்டேன். அப்படி ஒரு வார்த்தை என்னோட வாயில இருந்து வராது, திரும்ப ஒரு படம் பண்ணுவோம்னு கமல் சார் சொல்லியிருக்கார். நான் விரும்பிதான் உத்தம வில்லன் படம் தயாரித்தேன்” எனக் கூறியிருந்தார். அவரின் இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி இருந்தது. இந்நிலையில், மீண்டும் கமல் – லிங்குசாமி கூட்டணி இணையலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
லிங்குசாமி தயாரிப்பில் கமல்
ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் கமல். அதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அதற்கு முன்பாக ஒரு படம் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்காக கமல் நடிக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. உத்தம வில்லன் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட கமல் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதேநேரம் இந்தப் படத்தை லிங்குசாமி தயாரிக்க மட்டுமே உள்ளதாகவும், ஹெச் வினோத் இயக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. இல்லையென்றால் மகேஷ் நாராயணன் இயக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
விரைவில் அறிவிப்பு
அடுத்தாண்டு மக்களவை தேர்தல் வரவிருப்பதால், அதற்கு முன்பாகவே தான் கமிட்டான படங்களில் நடித்து முடிக்க கமல் முடிவு செய்துள்ளாராம். இந்தியன் 2 இறுதிப் பகுதியை எட்டிவிட்ட நிலையில், மணிரத்னம் இயக்கும் படமும் விரைவில் தொடங்க உள்ளதாம். இதனால் லிங்குசாமிக்காக திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் நடிக்கவுள்ள படத்தையும் விரைவில் முடிக்க திட்டமிட்டுள்ளாராம். இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.






