
வசூல்மழையில் வாரிசு
வாரிசு படத்தையும் தாண்டி தளபதி 67 படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகவே காணப்பட்ட நிலையில், தற்போது அதை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தருணம் வந்துள்ளது. நடிகர் விஜய்யின் வாரிசு படம் ரிலீசாகி சில தினங்களே ஆகியுள்ள நிலையில், படம் சர்வதேச அளவில் 300 கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ளது. இன்னும் சில தினங்களில் 300 கோடி ரூபாய் வசூலை படம் தாண்டும் என்று சினிமா ட்ராக்கர்கள் கணித்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்தின் கொண்டாட்டம் முடிவதற்கு முன்னதாகவே ரசிகர்கள் அடுத்த கொண்டாட்டத்திற்கு தயாராகிவிட்டனர்.
தளபதி 67 படம்
வாரிசு படத்தின் சூட்டிங்கின்போதே தளபதி 67 படத்தின் தகவல்கள் தொடர்ந்து வந்தவண்ணம் இருந்தது. இதற்கேற்றாற்போல லோகேஷ் கனகராஜ் போகுமிடமெல்லாம் அவரை ரசிகர்கள் தொடர்ந்து தளபதி 67 அப்டேட் கேட்டு மொய்த்தவண்ணம் இருந்தனர். படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவுடன் தான் அப்டேட் கொடுப்பதாக அவர் நழுவினாலும் அவரை ரசிகர்கள் விட்டபாடில்லை.
அடுத்தடுத்த அப்டேட்கள்
இந்நிலையில் விஜய்யின் 67வது படமான தளபதி 67ல் அவர் 50 வயது கேங்ஸ்டராக நடிக்கவுள்ளதாகவும், அவருக்கு ஜோடியாக த்ரிஷா பல ஆண்டுகள் கழித்து இணையவுள்ளதாகவும், விஜய்க்கு சஞ்சய் தத் உள்ளிட்ட 6 வில்லன்கள் நெருக்கடி கொடுக்கவுள்ளதாகவும் பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் ஆக்கிரமிப்பு செய்தன.
தளபதி 67 குறித்த அறிவிப்பு
இந்நிலையில் வாரிசு படம் ரிலீசாகி படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. இதையடுத்து நேற்று மாலை தளபதி 67 படம் குறித்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டது. தயாரிப்பாளர் லலித்குமார் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்தடுத்து தளபதி 67 படம் குறித்து அறிவிப்புகளை வெளியிட்டனர்.
இசை, நடனம், சண்டை
நேற்றைய தினம் படத்தின் அறிவிப்புடன் படத்தின் இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், சண்டை, நடனம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளவுள்ளவர்கள் குறித்த அறிவிப்புகளும் காணப்பட்டது. படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த கூட்டணி நியூக்ளியர் பாமாக ரசிகர்களை தாக்கும் என்று அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

நடிகர்கள் அப்டேட்
இந்நிலையில் இன்று மாலையிலிருந்து படத்தின் நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. முதலில் படத்தில் இணையவுள்ள சஞ்சய் தத், தமிழில் தன்னுடைய முதல் படமான தளபதி 67 குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து அடுத்த ஒரு மணிநேரத்தில் படத்தில் இணைந்துள்ள பிரியா ஆனந்த் குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ப்ரியா ஆனந்த்
இந்த வலிமையான டீமுடன் இணைந்து பணியாற்றுவது த்ரில்லிங்காக உள்ளதாக பிரியா ஆனந்த் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதையடுத்து இன்னும் 4 மணிநேரத்திற்கு அடுத்தடுத்து நடிகர்கள், நடிகைகள் குறித்து அறிவிப்பு வெளியாகவுள்ளது. முன்னதாக படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் காஷ்மீரின் ஸ்ரீநகரில் நாளைய தினம் துவங்கவுள்ளதாகவும் அதற்காக த்ரிஷா உள்ளிட்டவர்கள் தனி விமானத்தில் தங்களது பயணத்தை துவங்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.







