இந்த மாதமே துவங்குகிறது ஏர்டெல் 5G சேவை!


பார்தி ஏர்டெல் நிறுவனம் இந்தியாவில் 5ஜி சேவை துவங்குவது பற்றிய முக்கிய தகவலை வெளியிட்டு இருக்கிறது.

5ஜி வெளியீட்டுக்காக ஏர்டெல் நிறுவனம் பல்வேறு நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்துள்ளது. 5ஜி ரேடியோ அக்சஸ் நெட்வொர்க் சேவையை வழங்குவதற்காக பார்தி ஏர்டெல் நிறுவனத்துடன் நோக்கியா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. சமீபத்தில் தான் 5ஜி ஸ்பெக்ட்ரத்திற்கான ஏலம் நடந்து முடிந்த நிலையில், பல ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. ஏலத்தில் ஏர்டெல் நிறுவனம் ரூ. 43,084 கோடி மதிப்பிலான 5ஜி ஸ்பெக்ட்ரத்தை வாங்கி இருக்கிறது. இது மட்டுமின்றி 5ஜி நெட்வொர்க் தொடர்பாக எரிக்சன் மற்றும் சாம்சங் நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் போடப்பட்டு இருப்பதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் மாதத்தில் இருந்தே 5ஜி சேவையை வெளியிட ஏர்டெல் நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது. இந்த ஆண்டு சாம்சங் நிறுவனத்துடனான ஒப்பந்தம் துவங்க இருக்கும் நிலையில், எரிக்சன் நிறுவனத்துடன் சேர்ந்து நாடு முழுக்க கனெக்டிவிட்டி சார்ந்த சேவைகளை ஏர்டெல் நீண்ட காலமாக வழங்கி வருகிறது.

மத்திய தொலைத்தொடர்புத் துறை சார்பில் 5ஜி ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கீடு செய்தற்கான ஏலம் நடத்தப்பட்டது. இதில் ஏர்டெல் நிறுவனம் 19 ஆயிரத்து 867.8 மெகாஹெர்ட்ஸ் வரையிலான ஸ்பெக்ட்ரத்தை 900 மெகாஹெர்ட்ஸ், 1800 மெகாஹெர்ட்ஸ், 2100 மெகாஹெர்ட்ஸ் மற்றும் 3300 மெகாஹெர்ட்ஸ் மற்றும் 26 ஜிகாஹெர்ட்ஸ் பேண்ட்களில் வாங்கி இருக்கிறது.

ஏர்டெல் மற்றும் எரிக்சன் நிறுவனங்கள் இடையே 25 ஆண்டு கால தொடர்பு இருக்கிறது. எரிக்சன் சார்பில் நாடு முழுக்க பல தலைமுறை மொபைல் தகவல் பரிமாற்றத்தை செயல்படுத்த வைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. சமீபத்திய 5ஜி ஸ்பெக்ட்ரத்திற்கான ஏலம் நிறைவு பெற்றதை அடுத்து இந்த இரண்டு நிறுவனங்களுக்கிடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. ஏர்டெல் நிறுவனம் எரிக்சன் ரேடியோ சிஸ்டம், எரிக்சன் மைக்ரோவேவ் மொபைல் டிரான்ஸ்போர்ட் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சீரான 5ஜி ரேடியோ அக்சஸ் நெட்வொர்க் சார்ந்த சேவைகளை வழங்க இருக்கிறது. எரிக்சன் சார்பில் நாட்டின் 12 வட்டாரங்களில் ஏர்டெல் நிறுவனத்திற்கு 5ஜி கனெக்டிவிட்டி வழங்கப்பட இருக்கிறது.

இதனிடையே இந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 24 ஆயிரத்து 740 மெகாஹெர்ட்ஸ் வரையிலான ஸ்பெக்ட்ரத்தை ரூ. 88 ஆயிரத்து 078 கோடி செலவில் விலைக்கு வாங்கியது. வோடபோன் ஐடியா நிறுவனம் 3 ஆயிரத்து 300 மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரத்தை வாங்கி இருக்கிறது.

இதனையடுத்து ஒவ்வொரு டெலிகாம் நிறுவனமும் இந்தியாவில் 5ஜி சேவையை வெளியிட துவங்க இருக்கும் நிலையில், பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். இந்தியாவில் 2023 முதல் 5ஜி சேவையை வழங்கும் என மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்து இருக்கிறார்.

மத்திய டெலிமேடிக்ஸ் துறை சார்பில் NSA கோர் நெட்வொர்க் உருவாக்கப்பட்டு வருகிறது. இது ஆகஸ்ட் மாதத்திற்குள் இது தயார் நிலைக்கு வந்து விடும். இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு டிசம்பர் வரை சோதனை நடைபெறும். அதன்பின், “அடுத்த ஆண்டு வாக்கில் இந்திய 5G ஸ்டாக் தயாராகிவிடும். அப்போது பி.எஸ்.என்.எல். மூலம் 5ஜி சேவைகள் வழங்கப்படும்.” என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.