ஆப்பிள் போனை ஹேக் செய்தால் ரூ16 கோடி பரிசு


ஆப்பிள் நிறுவனம் தனது தயாரிப்புகளான ஸ்மார்ட்போன்கள், ஐபேட்கள் ஆகியவற்றைப் பாதுகாக்க லாக்டவுன் மோட் (lockdown mode) என்ற அம்சத்தை இந்த ஆண்டு நடைபெற்ற WWDC நிகழ்வில் அறிமுகம் செய்து இருக்கிறது.

லாக்டவுன் மோட் என்பது ஒரு புதிய பாதுகாப்பு அடுக்கு தொழில்நுட்பம் ஆகும். ஐபோன் பயனர்களுக்காக ஆப்பிள் நிறுவனத்தால் இது பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. லாக்டவுன் மோடானது அரசியல்வாதிகள், மனித உரிமை வழக்கறிஞர்கள், போன்ற விஐபிகளுக்கு போனில் புதிய பாதுகாப்பு அடுக்கைச் சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது.
பெகாசஸ் ஊழல் நடைபெற்று கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகே ஆப்பிள் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

இஸ்ரேலின் NSO குழுமத்தின் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான ஐபோன் ஹேக் செய்யப்பட்டது. இதன்பின் பல தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், செய்தியாளர்கள் ஆகியோரும் குறிவைக்கப்பட்டனர். இதற்காக ஆப்பிள் நிறுவனத்துக்கு சம்மனும் அனுப்பப்பட்டது. தற்போது அந்நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் புதிய லாக்டவுன் மோட் iOS 16 வெர்ஷனில் கிடைக்குமாம்.

இந்த லாக்டவுன் மோட் ஆப்பிளின் ஐபோன்கள், ஐபாட்கள் மற்றும் மேக் கணினிகளில் வேலை செய்யும் என கூறப்படுகிறது. இதனால் ஆப்பிள் சாதனங்களை ஹேக் செய்வது என்பது முடியாத காரியம் என சொல்லப்படுகிறது. அப்படி லாக்டவுன் மோடையும் மீறி ஹேக்கர்கள் ஹேக் செய்துவிட்டால், அவர்களுக்கு 2 மில்லியன் டாலர் பரிசாக வழங்கப்படும் என ஆப்பிள் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ.16 கோடி ஆகும்.