
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் தான் ஐபோன் 14 ப்ரோ மாடலை அறிமுகம் செய்தது. இந்த புதிய ஐபோன் மாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக கிராஷ் டிடெக்க்ஷன் (crash detection) எனும் தரமான தொழில்நுட்ப வசதியைக் கொண்டு இந்த ஐபோன் 14 ப்ரோ அறிமுகமானது. இந்த புதிய ஐபோனில் சில புதிய வசதிகள் வழங்கப்பட்டன. அவை பயனரின் பாதுகாப்பை மனதில் வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. அவையே இந்த புதிய ஐபோனில் சிறப்புகளாக இருந்தது என்றும் சொல்லலாம்.
அவசர உதவி
குறிப்பாக ஐபோன் 14 ப்ரோ வைத்திருக்கும் பயனர்கள், காரில் சென்றுகொண்டிருக்கும் போது விபத்து ஏற்பட்டால், 911 என்ற அவசர உதவிக்கு தானாகவே வைஃபை மூலம், இவர் விபத்தில் சிக்கி உள்ளார் என்று தகவல் தெரிவிக்கும். பயனாளர் பேச முடியாத நிலையில் இருக்கும்போது, அவரால் பதிலளிக்க முடியவில்லை என்றால் தானியங்கி முறையில் தானே தகவலை அனுப்பிவிடும். இதனால் மீட்புப் படையினரால் விபத்து நடந்த இடத்தை தாமாகவே துல்லியமாக அறிந்து விரைந்து சென்று அவரை காப்பாற்ற முடியும்.
நடந்தது என்ன?
இதுபோன்ற தொழில்நுட்ப வசதி மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும். ஆனால், அந்த தொழில்நுட்பத்தில் இருக்கும் குறைபாடு சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வின் மூலம் தெரிய வந்துள்ளது. சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள சின்சினாட்டி என்ற இடத்தில் பூங்கா ஒன்றில் ரோலர் கோஸ்டரில் விளையாடிக் கொண்டு இருந்தார். இதனை அடுத்து அந்த பெண்ணின் ஐபோன் அவர் ஆபத்தில் இருப்பதாகக் கருதி 911 என்ற அவசர உதவி எண்ணிற்க்கு தகவல் அளித்தது.
ஐபோன் சென்சார்
அதாவது ரோலர் கோஸ்டரின் உயரம், வேகம், அதிர்வு போன்றை கார் விபத்தோடு ஒத்திருப்பதால் ஐபோன் தனது சென்சார் மூலம் இவர் ஆபத்தில் உள்ளதாக நினைத்து அவசர உதவிக்கு தகவல் கொடுக்க, அங்கு அவசர உதவி மீட்பு பணியினர் விரைந்தனர். அதன்பின்னர் மீட்பு பணியினர் வந்து விசாரித்ததில் எந்தவித அசம்பாவிதமும் நிகழவில்லை எனத் தெரியவந்தது. குறிப்பாக இது ஐபோன் கொடுத்த தகவல் என்று தெரிந்துகொண்டனர்.
ஆப்பிள் கூறியது என்ன?
இதுகுறித்து ஆப்பிள் நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறியது என்னவென்றால், இத்தகைய நவீனத் தொழில்நுட்பம் மனிதர்களின் உயிர்களைக் காக்கும் வகையில் அமைக்கப்பட்டது. இந்த தரமான தொழில்நுட்பம் மிகவும் அவசியமான ஒன்றுதான். ஆனால் இதில் சிறிய குறைகள் உள்ளன. விரைவில் இவை நிவர்த்தி செய்யப்படும் என்று கூறினார்.
ஏரோபிளேன் மோட்
ரோலர் கோஸ்டரில் இருக்கும்போது இதுபோன்ற சிக்கல் நேராமல் இருக்க ஏரோபிளேன் மோட் வசதியை பயன்படுத்தலாம் அல்லது போனை எடுத்துச் செல்வதை தவிர்த்து இருக்கலாம் என்று சிலர் அந்த பெண்ணிடம் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு அம்சத்தில் அதிக கவனம் செலுத்துகிறது ஆப்பிள் நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனத்தின் புதிய தொழில்நுட்பங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.