துணிவு படத்தைத் தொடர்ந்து அஜித் தனது அடுத்த படத்திற்காக ரெடியாகி வருகிறார். லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்தின் 62வது படம் உருவாகிறது. தற்போதைக்கு ‘ஏகே 62’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங், பொங்கலுக்குப் பிறகு தொடங்கும் எனக் கூறப்படுகிறது. போடா போடி, நானும் ரவுடி தான், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்கள் மூலம் கவனம் ஈர்த்த விக்னேஷ் சிவன் ஏகே 62 படத்தை இயக்க இருக்கிறார்.
ஏகே 62 படத்தில் அஜித்துடன் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் பற்றிய அப்டேட் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. ஆனால் அஜித் ஜோடியாக திரிஷாவும், காமெடி கேரக்டரில் ஜிபி முத்துவும் நடிக்கலாம் என செய்திகள் வெளியாகி இருந்தன. அதேபோல் நடிகர் தனுஷ் ஒரு முக்கியமான கேமியோ ரோலில் நடிக்கலாம் என செய்திகள் வெளியாகின. தனுஷுக்கு போலீஸ் கேரக்டர் அல்லது அஜித்துக்கு வில்லன் என சொல்லப்பட்டது. இந்த சூழலில் தான் ஏகே 62 படத்தில் அரவிந்த் சாமி வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஏகே 62 படத்தில் தனுஷ் நடிப்பாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதேபோல், திரிஷா தான் ஹீரோயின் என்ற பேச்சுகள் அடிப்பட்டன. ஆனால், தற்போது திரிஷாவுக்கு பதிலாக காஜல் அகர்வால் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஏற்கனவே இந்தக் கூட்டணி விவேகம் படத்தில் நடித்திருந்தனர். இந்தியன் 2 படத்தில் கமலுடன் நடித்து வரும் காஜல் அகர்வாலுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்ததால் இனிமேல் நடிப்பது சந்தேகம் தான் என செய்திகள் வெளியாகின. ஆனால் அஜித்தின் ஏகே 62 படத்தில் அவர் இணையவுள்ளதாக வரும் செய்திகள், காஜல் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது. துணிவு ரிலீஸானதும் உடனடியாக ஏகே 62 அப்டேட்கள் வெளியாகும் என்றும், படப்பிடிப்பும் உடனே தொடங்கப்படும் எனவும் உறுதியாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் மோகன்லால் கேமியோ ரோலில் நடிக்கப் போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீப காலமாக சினிமாவில் பிரபல நடிகர்களை கேமியோவாக அழைத்து வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவது முதல் பாக்ஸ் ஆபிஸ் வேட்டைக்கு வரை அவர்களை பயன்படுத்துவது வழக்கமாக மாறி உள்ளது.
மலையாள திரையுலகின் நம்பர் ஒன் நடிகரான மோகன்லால் ஜெயிலர் படத்தில் இணைந்தால் கேரளாவிலும் மிகப்பெரிய வசூல் வேட்டை கன்ஃபார்ம். ஜெயிலர் படத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் சிவராஜ்குமார் நடித்து வருகிறார். இந்நிலையில், மலையாள திரையுலகின் முன்னணி நடிகரும் நடிக்கிறார் என்றால் ஒட்டுமொத்த தென்னிந்தியாவிலேயே படம் வேறலெவல் கலெக்ஷனை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருவரும் ஸ்க்ரீனில் வந்தால் திரை தீப்பிடிக்குமே என ரசிகர்கள் கூஸ்பம்ப்ஸ் அடைந்து வருகின்றனர். ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வரும் முத்துவேல் பாண்டியனின் வேட்டை வரும் சம்மரில் பெரிய சம்பவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிடுமா? அல்லது படத்தின் ரிலீஸ் சமயத்தில் அறிவிக்குமா?






