மீண்டும் ரிலீஸ் ஆகிறதா ரஜினியின் பாபா?

டிசம்பர் 12ம் தேதி ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு மெகா ட்ரீட் ஒன்று கிடைக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. நெல்சன் இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. ஜெயிலர் படத்தில் கன்னட முன்னணி நடிகர் சிவ ராஜ்குமாரும் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். இந்நிலையில், ஜெயிலர் படத்தின் மேக்கிங் வீடியோ கடந்த வாரம் வெளியாகி இணையத்தில் ட்ரெண்ட் ஆனது. அடுத்த மாதம் 12ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த தினம் என்பதால், ஜெயிலர் படத்தில் இருந்து புதிய அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினியின் பாபா ரீ-ரிலீஸ்

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாபா திரைப்படம் மீண்டும் ரிலீஸாக உள்ளதாம். 2002ல் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாபா. படத்திற்கு அவரே கதை, திரைக்கதை எழுதி தயாரித்து இருந்தார். அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களை தொடர்ந்து, சுரேஷ் கிருஷ்ணா பாபா படத்தை இயக்கினார். ரஜினியுடன், மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, நம்பியார், கருணாஸ், சங்கவி, ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அதேபோல், ஏஆர் ரஹ்மான் பாபா படத்திற்கு இசையமைத்தார். அப்போது இந்த படத்திற்கு மிகப்பெரிய அளவில் ப்ரமோஷன் வேலைகள் செய்யப்பட்டன. இதனால் ரஜினி ரசிகர்கள் மட்டும் இன்றி பொதுமக்களும் இந்த படத்தைப் பார்க்க மிகுந்த ஆர்வம் கொண்டு இருந்தனர்.

பாபாவின் அவதாரம்

மகா அவதார் பாபாஜியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பாபா திரைப்படம், ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஆனாலும், இந்தப் படத்தில் ரஜினி அடிக்கடி காட்டும் பாபா முத்திரை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வசீகரித்தது. அதேபோல், வழக்கம் போல ரஜினியின் ஸ்டைலும் மாஸ் காட்டியது. நெகட்டிவ் விமர்சனங்களால் பாக்ஸ் ஆபிஸிலும் தடுமாறிய பாபா திரைப்படம் விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் பெரிய நஷ்டத்தைக் கொடுத்தது. அதன் பின்னர் ரஜினியும் அவர்களுக்கு நஷ்டஈடு கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய பொலிவுடன் பாபா

இந்நிலையில் பாபா திரைப்படம் புதுப்பொலிவுடன் மீண்டும் வெளியாக உள்ளதாம். படம் முழுவதும் ரீ-எடிட்டிங் செய்து புதிய கோணத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். மேலும், நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டு, டிஜிட்டலில் ஒவ்வொரு பிரேமும் இன்னும் தரம் கூட்டப்படுகிறதாம். அதேபோல், ஏஆர் ரஹ்மான் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் புதிதாகவே ரீமிக்ஸ் செய்யப்பட்டு, டால்பி மிக்ஸ் ஒலி அமைப்புக்கு மாற்றப்படுகிறதாம். இதனால், பாடல்கள் அனைத்தும் புதிய அனுபவத்தை ரசிகர்களுக்கு தரும் என படக்குழு தெரிவித்துள்ளது. இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், ரஜினியின் பிறந்தநாள் தினத்தில் இந்தப் படம் மீண்டும் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.