
இப்போது நாட்டில் எங்கு திரும்பினாலும் 5ஜி பற்றிய பேச்சுக்கள் தான் அதிகம். இந்நிலையில் BSNL நிறுவனமும் அதன் 5ஜி சேவை எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. நாட்டில் உள்ள கிராமப்புறங்கள் வரை 5ஜியை எடுத்துச் செல்ல BSNL நிறுவனம் உறுதியாக இருக்கிறது என்று டெலிகாம் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். எப்போது இந்தியாவில் BSNL 5G சேவையை அறிமுகம் செய்யுமென்று பார்க்கலாம்.
இந்தியாவில் எப்போது வரும் 5G?
இந்தியாவில் 5G நெட்வொர்க் அதிகாரப்பூர்வமாக அக்டோபர் 1 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, இந்திய மொபைல் காங்கிரஸ் (IMC) நிகழ்வில் 5ஜி சேவையைத் தொடங்கி வைத்தார். ஏர்டெல் நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் எட்டு நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதேசமயம், ரிலையன்ஸ் ஜியோ தனது 5ஜி சேவைகளை இந்த மாத இறுதியில் தொடங்குவதை உறுதி செய்துள்ளது. Vodafone-Idea (Vi) சற்று தாமதமாக 5G போட்டியில் களமிறங்கும். Vi 5G வெளியீட்டுத் தேதி பற்றிய விபரங்களை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.
BSNL 5ஜி
இதற்கிடையில், அரசு நடத்தும் பிஎஸ்என்எல் (BSNL) அடுத்த ஆண்டு 5ஜி சேவையை அறிமுகப்படுத்தும் என்று தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உறுதிப்படுத்தினார். BSNL 5G அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று இந்தியா தனது 77வது சுதந்திரத்தைக் கொண்டாடும் போது, BSNL அதன் 5G சேவையை அறிமுகம் செய்யுமென்று அவர் உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.
தற்போது புது தில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடைபெற்ற IMC 2022 நிகழ்வின் போது, தொலைத்தொடர்பு அமைச்சர் இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார். BSNL 5G, இந்தியாவில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் என்று அமைச்சர் தெரிவித்தார். BSNL நாட்டின் தொலைதூர மூலையில் உள்ள கிராமப்புறங்களில் இருக்கும் மக்கள் வரை அனைவரையும் தனது சேவையால் இணைத்துள்ளதை நாம் கவனிக்க வேண்டியதுள்ளது.
5ஜி நெட்வொர்க்கை இந்தியாவில் உள்ள அனைத்து கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு எடுத்துச் செல்ல BSNL தான் சரியான வழி என்பதை யாரும் மறுக்க முடியாது. BSNL 5G ஆனது தனியார் நிறுவனங்களின் வெளியீட்டை விடக் கிட்டத்தட்ட ஒரு வருடம் தாமதமாக இருக்கும் என்றாலும் கூட, அரசுக்குச் சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனத்தின் 4G வெளியீட்டுடன் ஒப்பிடும் போது, இது மிகவும் வேகமாகக் களமிறக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிஎஸ்என்எல் இந்தியாவில் முதன்முதலில் 4ஜி சேவையை அறிமுகப்படுத்தியதை உறுதிப்படுத்த சுமார் 10 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது என்பதை நம்மால் மறக்க முடியாது. ஏர்டெல் நிறுவனம் தனது 4ஜி சேவைகளை 2012 இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. ஆனால், 10 ஆண்டுகளுக்கு பிறகு, BSNL நிறுவனம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தான் 4G நெட்வொர்க்கிற்கு மேம்படுத்த அரசாங்கத்தின் ஒப்புதலைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
குறைந்த விலையில் BSNL 5ஜி
200-க்கும் மேற்பட்ட நகரங்களில் பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களின் 5ஜி சேவைகள் கிடைக்கும் என்று அமைச்சர் வைஷ்ணவ் தெரிவித்திருக்கிறார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாட்டின் 80-90 சதவீத மக்களுக்கு 5ஜி சேவையை வழங்க அரசு மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இலக்கு வைத்துள்ளன என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், 2023 டிசம்பரில் நாடு முழுவதும் 5ஜி சேவைகளை வழங்குவதாக ஜியோ அறிவித்துள்ளது. அடுத்த வருடம் முதல் BSNL பயனர்களுக்கு 5ஜி மலிவு விலையில் கிடைக்க வாய்ப்புள்ளது.