தோனி தயாரிக்கும் தமிழ்ப்படம்

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் தோனியும், அவரது மனைவி திருமதி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து ‘தோனி என்டர்டெயின்மெண்ட்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். இந்நிறுவனம் மூலம் தமிழில் திரைப்படம் ஒன்றை தயாரிக்கின்றனர்.

திருமதி சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கத்தை மையமாக கொண்டு, பொழுதுபோக்கு படமாக தயாராகும் இப்படம் விரைவில் தொடங்க இருக்கிறது. இந்நிறுவனம் அனைத்து மொழிகளிலும் பொழுதுபோக்கு அம்சம் உள்ள திரைப்படங்களை தயாரிப்பதற்காக களம் இறங்கி இருக்கிறது. இதற்கான பல கட்ட தயாரிப்பிலும் ஈடுபட்டிருக்கிறது.

குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய ஐபிஎல் போட்டிகளை அடிப்படையாகக் கொண்டு பிரபலமான ‘ரோர் ஆஃப் தி லயன்’ எனும் ஆவணப் படத்தை தயாரித்து வெளியிட்டிருக்கிறது. ‘வுமன்’ஸ் டே அவுட்’ என்ற பெயரில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு குறும்படத்தையும் தோனி என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்திருக்கிறது.

இவர்களின் முதல் திரைப்படத்தை ‘அதர்வா- தி ஆர்ஜின்’ எனும் கிராஃபிக் நாவலை எழுதிய ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். தமிழில் தோனி என்டர்டெய்ன்மெண்ட்டின் முதல் தயாரிப்பை இயக்கும் வாய்ப்பை பெற்றிருக்கும் ரமேஷ் தமிழ்மணி பேசுகையில், ”சாக்‌ஷி தோனி எழுதிய கதையின் கருவைப் படிக்கும்போதே இதன் தனித்துவத்தை என்னால் உணரமுடிந்தது. புத்தம் புதிதாய் இருந்த இந்த கதை குடும்பங்களை மகிழ்வூட்டி, சிரிக்கவைத்து சிந்திக்கவைக்கும் என்று நம்பினேன். இந்தக் கருவைத் திரைக்கதையாக்கி திரைப்படமாக்கும் வாய்ப்பை அவர் எனக்கு வழங்கியதைப் பெருமையாகக் கருதுகிறேன். இந்தப் பயணத்தில் பங்கேற்பதில் ஒட்டுமொத்தக் குழுவும் முழு ஆர்வத்தில் இணைந்துள்ளது. ஒரு சிறந்த திரைப்படத்தை மக்களுக்குக் கொடுக்கப்போகிறோம் என்ற நம்பிக்கையில் துளிர்க்கும் ஆர்வம் அது” என்று ரமேஷ் தமிழ்மணி கூறியுள்ளார். இப்படத்தில் பணியாற்றும் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே மத்திய அரசின் தகவல், ஒலிபரப்பு அமைச்சகத்தின் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் சார்பில் 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நவம்பர் 20ந் தேதி முதல் 28ந் தேதி வரை கோவாவில் நடைபெறுகிறது.

இந்த விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதை அம்சம் கொண்ட 25 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இதில் தமிழில் ஞானவேல் இயக்கி சூர்யா நடிப்பில் வெளிவந்த ஜெய்பீம், எஸ்.கமலக்கண்ணன் இயக்கிய குரங்கு பெடல் மற்றும் ரா.வெங்கட் இயக்கிய கிடா ஆகிய மூன்று படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தேசிய நீரோட்ட திரைப்படப்பிரிவில், விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கிய தி காஷ்மீர் பைல்ஸ், ராஜமௌலி இயக்கிய ஆர்ஆர்ஆர் உள்பட 5 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

மேலும் கதை அம்சம் அல்லாத திரைப்படங்களில், லிட்டில் விங்க்ஸ் என்ற தமிழ்ப்படம் உள்பட 20 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்தியன் பனோரமாவின் தேர்வுக்குழுவில் பிரபல இயக்குநரும், படத்தொகுப்பாளருமான வினோத் கனாத்ரா தலைமையில், ஒளிப்பதிவாளர் ஏ. கார்த்திக் ராஜா உள்பட 12 உறுப்பினர்கள் கொண்ட தேர்வுக்குழு இந்த திரைப்படங்களை தேர்வு செய்துள்ளதாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.