பொன்னியின் செல்வனில் வைரமுத்து ஏன் இல்லை? மணிரத்னம் விளக்கம்

தமிழ் திரையுலகில், பலரின் கனவுத் திரைப்படம் பொன்னியின் செல்வன். கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பலரின் நடிப்பில் அந்தத் திரைப்படத்தைத் தற்போது சாத்தியப்பத்தி இருக்கிறார் இயக்குனர் மணி ரத்னம். படம் செப்டம்பர் 30ம் தேதி பிரமாண்டமாக வெளிவர இருக்கிறது. இந்த திரைப்படத்தின் புரோமோசன் வேலைகள் வெகு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதன் முதற் கட்டமாக இந்த திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த செய்தியாளர்கள் சந்திப்பிற்கு நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி, பார்த்திபன், நடிகை த்ரிஷா, இயக்குனர் மணி ரத்னம் ஆகியோர் பங்கேற்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தனர்.

“பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் அன்கட் வெர்ஷன் டிஜிட்டலில் கிடைக்குமா?” என பத்திரிக்கையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, இயக்குனர் மணிரத்னம்,”அன்கட் வெர்ஷனுக்கு நீங்கள் புத்தகத்தை தான் படிக்க வேண்டும், ஷூட் செய்த அனைத்தும் படத்தில் வைத்துவிட்டேன்.”என நகைச்சுவையாக பதிலளித்தார்.

“இந்த திரைப்படத்தில் வைரமுத்து இடம்பெறாதது ஏன்?” என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு,”வைரமுத்துவுடன் இணைந்து பல திரைப்படங்கள் பணியாற்றி விட்டோம், பல புதிய திறமையாளர்கள் அவ்வபோது வந்து கொண்டிருக்கிறார்கள், அதனால் தான் இந்த முடிவு” என பதிலளித்தார்.

“இந்த புத்தகத்தை சிறு வயது முதல் பலமுறை படித்திருக்கிறேன். படிக்கும் போதெல்லாம் இது திரைப்படத்திற்கான நாவல் என்று தான் எண்ண வைக்கும். இந்த நாவலில் இடபெற்றிருக்கும் சாகசங்கள், கதாபத்திர வடிவமைப்புகள் தான் இது திரைப்படத்திற்கான நாவல் என எண்ண வைக்கிறது. இந்த திரைப்படத்தில் வரும் பட்டை, நாமம் என்ற விவாதத்தை ஒரு காட்சியை வைத்து முடிவு செய்யக் கூடாது. உங்களின் முடிவு எனக்கு புரிகிறது, புத்தகத்தில் இடம்பெற்றுள்ள அனைத்தும் இந்த திரைப்படத்தில் இருக்கிறது, இந்த திரைப்படத்தில் சில மாற்றங்கள் இருக்கிறது, 5 பாகங்களைக் கொண்ட நாவலை அப்படியே படமாக்க முடியாது, அதை வெப் சீரியஸாகத் தான் பண்ண முடியும்,சினிமா என்பது ஒரு எக்னாமிக் மீடியம். ஆனால், உயிரோட்டம் கல்கி எழுதியது போல் தான் இருக்கும்.” என்றார்.

பார்த்திபன் குறித்து கேட்ட கேள்விக்கு,”பார்த்திபன் சார் இஸ் எ ஜெம், அவரே ஒரு இயக்குனர்.. அவருக்கு எது வேண்டும், எது வேண்டாம் எனத் தெரியும்.” என்றார்.”பொன்னியின் செல்வன் ட்ரைலரில் ஆழ்வார்கடியான் பாலத்திலிருந்து விழும் போது தமிழில் ,’அய்யோ’ என்கிற வசனம் வருகிறது, மற்ற மொழிகளில், ‘நாராயணா’ என்கிற வசனம் இடம்பெற்றுள்ளது, ஏன்?” என பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, “நாராயணா, இந்த கேள்வியை கண்டுபிடித்ததற்கு. கவலைப்படாதீர்கள் படம் முழுவதும் நாராயணா என்கிற வார்த்தை இடம்பெற்றிருக்கும்.” என நகைச்சுவையாகக் கூறினார் இயக்குனர் மணி ரத்னம்.