ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமுக்கும் வந்திருச்சு கட்டணம்!

Highlights

  • டுவிட்டர் நிறுவனத்தை தொடர்ந்து இன்ஸ்டாகிராமிலும் பிரீமியம் சேவை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
  • முதற்கட்டமாக கட்டண முறை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் அறிமுகமாக இருக்கிறது.

மெட்டா வெரிஃபைடு

டுவிட்டர் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் டுவிட்டர் புளூ சந்தா முறையை அறிவித்தது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. புதிய டுவிட்டர் புளூ சந்தாவில் வெரிஃபிகேஷன் புளூ டிக் மற்றும் தேடல்களில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதுதவிர ஏராளமான சேவைகள் டுவிட்டர் புளூ சந்தாவின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வரிசையில், தற்போது இன்ஸ்டாகிராம் இணைந்து இருக்கிறது. இன்ஸ்டாவின் தாய் நிறுவனமான மெட்டா புதிய கட்டண முறையை அறிவித்து இருக்கிறது. இந்த சந்தா மெட்டா வெரிஃபைடு என அழைக்கப்படுகிறது. புதிய மெட்டா வெரிஃபைடு மூலம், மெட்டா நிறுவனம் போலி அக்கவுண்ட்கள் மற்றும் ஆள்மாறாட்டத்தை குறைக்க செய்வது மற்றும் இதர பலன்களை வழங்குகிறது.

 

கட்டண விவரம்

மெட்டா தலைமை செயல் அதிகாரியான மார்க் ஜூக்கர்பர்க் இன்ஸ்டாகிராம் கட்டண முறையை அறிவித்தது. மெட்டா வெரிஃபைடு கட்டண முறை வலைத்தளத்திற்கு மாதம் 11.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 990 என்றும் ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு வலைத்தளங்களில் மாதம் 14.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1,240 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய கட்டண முறையின் கீழ் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டிற்கு வெரிஃபைடு டிக் வழங்கப்படுகிறது. புதிய முறை மெட்டா சேவைகளின் கீழ் தனித்துவம் மற்றும் செக்யுரிட்டியை வழங்கும் என மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்து இருக்கிறார். முதற்கட்டமாக மெட்டா வெரிஃபைடு சேவை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் இந்த வாரம் வழங்கப்படுகிறது. இதை் தொடர்ந்து விரைவில் மற்ற நாடுகளில் மெட்டா வெரிஃபைடு சேவை வழங்கப்படும் என அறிவித்து இருக்கிறது.

 

கூடுதல் வசதிகள்

மெட்டா வெரிஃபைடு சந்தாதாரர்களுக்கு வெரிஃபைடு பேட்ஜ், கூடுதல் செக்யுரிட்டி மற்றும் நேரடி வாடிக்கையாளர் சேவை மைய வசதி வழங்கப்படும் என மெட்டா தெரிவித்து இருக்கிறது.

 

சந்தா செலுத்தினால் மட்டுமே இந்த வசதி

இந்நிலையில் எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கியதில் இருந்து அந்த நிறுவனத்தில் ஏராளமான மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. ஊழியர்கள் பணிநீக்கத்தில் துவங்கி, அம்சங்களில் மாற்றம் என தொடர்ந்து பல்வேறு அதிரடிகள் டுவிட்டரில் நடைபெற்று வருகின்றன. இந்த வரிசையில், தற்போது கட்டணம் செலுத்துவோர் மட்டுமே டுவிட்டர் தளத்தில் டூ-ஃபேக்டர் ஆதெண்டிகேஷன் வசதியை கொண்டு தங்களின் அக்கவுண்ட்களை பாதுகாக்க முடியும். “மார்ச் 20 ஆம் தேதிக்கு பின் டுவிட்டர் புளூ சந்தா வைத்திருப்போர் மட்டுமே டு-ஃபேக்டர் ஆதெண்டிகேஷன் முறையில் குறுந்தகவல்களை பெற முடியும்,” என அந்நிறுவனம் டுவிட்டர் பதிவில் தெரிவித்து இருக்கிறது.

 

காரணம் என்ன?

டு-ஃபேக்டர் ஆதெண்டிகேஷன் முறையை கொண்டு பயனர்கள் தங்களின் அக்கவுண்டை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். டு-ஃபேக்டர் முறையை தேர்வு செய்யும் போது, பயனர்கள் வழக்கமான கடவுச்சொல் மட்டுமின்றி கூடுதலாக குறுந்தகவல், ஆதெண்டிகேஷன் ஆப் அல்லது செக்யுரிட்டி கீ என மூன்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது பயனர் அக்கவுண்ட் பாதுகாப்பாக இருக்கும். இந்த நிலையில், டுவிட்டரில் டு-ஃபேக்டர் ஆதெண்டிகேஷன் முறையை சிலர் தவறாக கையாள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர் என டுவிட்டர் தனது வலைதளத்தில் தெரிவித்து இருக்கிறது.

 

60 மில்லியன் இழப்பு

இதுகுறித்த பயனர் கேள்விக்கு எலான் மஸ்க் டுவிட்டர் தளத்திலேயே பதில் அளித்து இருக்கிறார். எலான் மஸ்க் அளித்த பதிலில், “டெலிகாம் நிறுவனங்கள் பாட் அக்கவுண்ட்களை கொண்டு டு-ஃபேக்டர் ஆதெண்டிகேஷன் எஸ்எம்எஸ்-ஐ அனுப்புகின்றனர். இதன் காரணமாக நிறுவனத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் மோசடி குறுந்தகவல்களால் 60 மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படுகிறது,” என தெரிவித்துள்ளார்.