அமெரிக்காவின் மின் வாகன உற்பத்தி நிறுவனத்தை வாங்குகிறது இந்திய நிறுவனம்!


இந்தியாவின் ஜென்சோல் இன்ஜினியரிங் (Gensol Engineering) நிறுவனம் அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் மின் வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்றை கையகப்படுத்துவதற்கான பணியில் களமிறங்கியிருப்பதாகவும், இதற்கான ஒப்பந்தத்தில்கூட இரு நிறுவனங்களும் கையொப்பம் இட்டுவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது, இந்நிறுவனம் சோலார் பேனல் தயாரித்தல் மற்றும் பிற மின் சாதன பொருட்களை உற்பத்தி செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

அமெரிக்க நிறுவனத்தின் பெரும் பங்கினை கையகப்படுத்தும் திட்டத்தில் ஜென்சோல் இன்ஜினியரிங் இருக்கின்றது. இந்த கையகப்படுத்தலை அடுத்து விலைக் குறைவான மின்வாகன உற்பத்தி பணிகளை அது மேற்கொள்ளும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், வெகு விரைவில் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தையில் விற்பனைக்கு வரும் என்கிற சூழல் உருவாகியுள்ளது. நிறுவனம் வரும் 2024 ஆம் நிதியாண்டிற்குள் தங்களுடைய வருவாயை 500 கோடி ரூபாய் முதல் 600 கோடி ரூபாய் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளது. எனவே வெகு சீக்கிரத்திலேயே நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி மற்றும் விற்பனையைத் தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் இந்நிறுவனம் முதலில் ஹேட்ச்பேக் ரக எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. தற்போது இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. மாதந்தோறும் 2 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்டுகள் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இந்த காரைப் போல் அதிக நவீன வசதிகள் கொண்ட எலெக்ட்ரிக் காராக ஜென்சோல் இன்ஜினியரிங் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2023ம் ஆண்டின் முதல் காலாண்டில் எலெக்ட்ரிக் கார் உற்பத்தி பணிகளை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புனேவில் உள்ள ஆலையில் முதல் கட்டமாக ஆண்டுக்கு 12 ஆயிரம் யூனிட்டுகள் வீதம் எலெக்ட்ரிக் காரின் உற்பத்தி பணிகளை அது தொடங்க திட்டமிட்டிருக்கின்றது. அதாவது, மாதம் ஒன்றிற்கு ஆயிரம் யூனிட்டுகள் என மின்சார கார்களை உற்பத்தி செய்ய இருக்கின்றது. இக்காருக்கு இந்தியாவில் கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து அதன் உற்பத்தி பணிகளை அதிகரிக்கச் செய்ய இருக்கின்றது ஜென்சோல் இன்ஜினியரிங். எலெக்ட்ரிக் கார் இன்ஜினியரிங் மற்றும் வடிவமைப்பு பணிக்காக 150க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியமர்த்த இருக்கின்றது.

பயணிகள் எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமின்றி சரக்கு மற்றும் டாக்சி போன்ற சேவைகளுக்கான மின்சார வாகனங்களையும் ஜென்சோல் இன்ஜினியரிங் தயாரிக்க இருக்கின்றது. அனைத்து வாகனங்களும் மேக்-இன்-இந்தியா தயாரிப்புகளாக உருவாக்கப்பட இருக்கின்றன. நிறுவனம் தயாரிக்கும் எலெக்ட்ரிக் வாகனங்கள் ஓர் முழு சார்ஜில் 200 க்கும் அதிகமான கிமீ செல்லக் கூடியதாகவும், அதிகபட்சம் இரண்டு மணி நேரத்தில் முழு சார்ஜையும் ஏற்றிக் கொள்ளும் திறனுடனும் அவை உருவாக்கப்பட இருக்கின்றன.