
கூகுளின் பிக்சல் போனில் ஆண்ட்ராய்டு 13 பதிப்பை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து போன்களும் இந்த புதிய ஆண்ட்ராய்டு 13 பதிப்பை பெறமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனம் இந்த புதிய ஆண்ட்ராய்டு பதிப்பை மேம்பட்ட பிரைவசி பாதுகாப்புடன் பல்வேறு புதிய அம்சங்களை உள்ளடக்கி வெளியிட்டுள்ளதாக தெரிகிறது. அதில் மொழித் தேர்வு அம்சமும் அடங்குமாம். இப்போதைக்கு இது பிக்சல் போன் பயனர்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது.
ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட சாம்சங் கேலக்ஸி, நோக்கியா, iQOO, மோட்டோரோலா, ஒன்பிளஸ், ஒப்போ, ரியல்மி, ஷார்ப், சோனி, டெக்னோ, விவோ, சியோமி மற்றும் பிற நிறுவங்களுக்கு அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் இந்த புதிய பதிப்பின் அப்டேட் கிடைக்கும் என சொல்லப்பட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட பிரைவசி உடன் புதிய அம்சங்களை உள்ளடக்கி உள்ள ஆண்ட்ராய்டு 13 வெர்ஷன் குறித்து பிளாக் பதிவு ஒன்றில் ஆண்ட்ராய்டு மற்றும் கூகுள் பிளே புராடக்ட் மேனேஜ்மேண்ட் பிரிவின் துணைத் தலைவர் அமீர் சமத் உறுதி செய்துள்ளார்.
இந்த புதிய வெர்ஷனில் பயனர்கள் தாங்கள் பயன்படுத்தும் அப்ளிகேஷன்களின் மொழியை பிரத்யேகமானதாக செட் செய்து கொள்ளும் வசதி உள்ளதாம். இதற்கு முன்னர் அனைத்து அப்ளிகேஷன்களுக்கும் ஒரே மொழி என்ற பயன்பாடு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தியா போன்ற பல்வேறு மொழி பேசும் மக்கள் தங்களது தாய்மொழியிலேயே தங்களது போனை இயக்கலாம் என்பது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. இதில் எத்தனை மொழிக்கான ஆதரவு இருக்கும் என்பதும், இது தவிர வேறு எந்த விதமான புதிய அம்சங்களை இந்த ஆண்ட்ராய்டு 13 பதிப்பு கொண்டு இருக்கும் என்பது தெரிவிக்கப்பட வில்லை. அதை விரைவில் கூகுள் வெளியிடும் என எதிர்பார்க்கலாம்.
கூகுளின் பிக்சல் 4 (XL), பிக்சல் 4a, பிக்சல் 4a (5G), பிக்சல் 5, பிக்சல் 5a (5G), பிக்சல் 6, பிக்சல் 6 புரோ போன்ற பிக்சல் போன்களில் ஆண்ட்ராய்டு 13 வெர்ஷன் அப்டேட் கிடைக்கிறது.