
சென்ற ஆண்டு அக்டோபரில் ரூ 6,499 என்ற விலையில் ஜியோ போன் நெக்ஸ்ட் அறிமுகமானது. அந்த போனுக்கு தற்போது ரூ 2000 எக்ஸ்சேஞ் ஆஃபரை வழங்கி இருக்கிறது ரிலையன்ஸ் நிறுவனம். இதன் மூலம் நீங்கள் இப்போது வேலை செய்யும் நிலையில் இருக்கும் உங்கள் பழைய போனை கொடுத்து புதிய ஜியோ நெக்ஸ்ட் போனை ரூ 4,499க்கு பெற முடியும்.
இதுதவிர இதற்கு EMI வசதியும் வழங்கப்படுகிறது. ரூ 1,999 செலுத்தி இந்த மொபைலை பெற்றுக் கொள்ளலாம். மீதித் தொகையை 18 அல்லது 24 மாதங்கள் EMI ஆகச் செலுத்தலாம். இதற்கான திட்டம் ரூ 300ல் இருந்து ஆரம்பிக்கிறது. இத்திட்டத்தில் இணைய ரூ 501 செயல்பாட்டுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி மேலும் தெரிந்து கொள்ள ஜியோ ஸ்டோர் அல்லது jio.com இணைய தளத்தை அணுகலாம்.
இதனிடையே ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் நிறுவனங்கள் பல்வேறு இந்திய நகரங்களில் 5ஜி சேவையை விரிவுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய டெலிகாம் நிறுவனங்கள் 5ஜி சேவையை விரிவுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் ஏர்டெல் 5ஜி சேவைகள் தற்போது குருகிராமில் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் மேற்கு வங்கம் முழுக்க 5ஜி சேவைகளை வழங்க ஜியோ இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. மேற்கு வங்கத்தில் சிலிகுரியில் முதலில் 5ஜி வழங்கப்படும் என ஜியோ அறிவித்து இருக்கிறது. இதைத் தொடர்ந்து வடக்கு வங்கம், அசாம், வட கிழக்கு பகுதிகளில் 5ஜி வழங்கப்பட இருக்கிறது. இதுமட்டுமின்றி இந்த ஆண்டு இறுதிக்குள் கொல்கத்தா முழுக்க 5ஜி சேவையை வழங்க திட்டமிட்டுள்ளதாக ஜியோ அறிவித்து இருக்கிறது.
தற்போது மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை, வாரனாசி, நாத்வாரா, பெங்களூரு மற்றும் ஐதராபாத் போன்ற நகரங்களில் ஜியோ 5ஜி சேவை வழங்கப்பட்டு இருக்கிறது. குருகிராம் மட்டுமின்றி மும்பை, டெல்லி, ஐதராபாத், வாரனாசி, சென்னை, சிலிகுரி, பெங்களூரு, நாக்பூர் மற்றும் பானிபட் போன்ற பகுதிகளில் ஏர்டெல் 5ஜி சேவைகள் வழங்கப்பட்டுள்ளது.
குருகிராம் முழுக்க ஏர்டெல் 5ஜி இன்னும் வழங்கப்படவில்லை. தேர்வு செய்யப்பட்ட சில பகுதிகளில் மட்டுமே 5ஜி வழங்கப்பட்டு இருக்கிறது. நாடு முழுக்க பத்து நகரங்களில் ஏர்டெல் 5ஜி வழங்கப்பட்டு இருக்கிறது. ஜியோ 5ஜி சேவைகள் எட்டு நகரங்களில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுக்க 5ஜி சேவைகளை வழங்கப்படும் என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்து இருந்தார். ஏர்டெல் நிறுவனம் 2024 மார்ச் மாதத்திற்குள் நாடு முழுக்க 5ஜி வழங்கப்படும் என அறிவித்து இருந்தது.
விஐ (வோடபோன் ஐடியா) நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு எப்போது 5ஜி சேவையை வழங்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 2024 மார்ச் மாதத்திற்குள் அனைத்து நகரங்களிலும் 5ஜி சேவையை வழங்குவதாக விஐ நிறுவனம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது. எனினும், இதுவரை 5ஜி வெளியீடு பற்றி விஐ எந்த தகவலையும் வெளியிடவில்லை.