மஹிந்திரா (Mahindra) நிறுவனம் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் எக்ஸ்யூவி 400 (XUV400) எலெக்ட்ரிக் காரின் டீசர் படங்களை வெளியிட்டிருக்கிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் மின்சார காராக டாடா நெக்ஸான் இவி இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் காரை நெக்ஸான் பிரைம் என்கிற பெயரில் டாடா நிறுவனம் தற்போது சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதுதவிர இந்த எலெக்ட்ரிக் கார் மாடலில் மற்றுமொரு கூடுதல் தேர்வாக நெக்ஸான் இவி மேக்ஸ் எனும் மாடலையும் நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
இந்த எலெக்ட்ரிக் கார் மாடல்களுக்கு சவால் விடும் வகையில் மஹிந்திரா (Mahindra) நிறுவனம் வெகு விரைவில் எக்ஸ்யூவி 400 (XUV400) எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த காரின் டீசர் படங்களையே நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது.
காரின் முகப்புப்பகுதியை வெளிக்காட்டக் கூடிய டீசர் படத்தையே தற்போது மஹிந்திரா வெளியிட்டு இருக்கிறது. இந்த காரை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக செப்டம்பர் 8 ஆம் தேதி வெளியீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த கார் குறித்த எந்த ஒரு சிறு தகவலையும் நிறுவனம் வெளியிடவில்லை.
இதனால், எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் கார் என்ன மாதிரியான அம்சங்களுடன் விற்பனைக்கு வர இருக்கின்றது என்பதை உறுதியாகக் கூற முடியவில்லை. அதேசமயம், கடந்த காலங்களில் இந்த கார் சோதனை ஓட்டத்தில் ஈடுபடும்போது கேமிராவின் கண்களில் சிக்கியது. அப்போது எடுக்கப்பட்ட படங்களின் வாயிலாக கார்குறித்து சில முக்கிய தகவல்கள் நமக்கு தெரிய வந்தன.
அட்ரினோஎக்ஸ் இணைப்பு வசதியுடன், பெரிய தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இந்த காரில் இடம் பெற இருப்பது தெரிய வந்தது. இத்துடன், அடாஸ் தொழில்நுட்பம், ஓர் முழு சார்ஜில் 400க்கும் அதிகமான ரேஞ்ஜை வழங்கக் கூடிய பேட்டரி பேக், கவர்ச்சிகரமான பாடி பேனல்கள் மற்றும் க்ரில் ஆகியவையும் எக்ஸ்யூவி 400 காரில் எதிர்பார்க்கப்படுகின்றது.
மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி 300 காரை தழுவியே இந்த எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் காரையும் உருவாக்கியிருக்கின்றது. ஆகையால், இந்த காரும் அதன் போட்டியாளரான டாடா நெக்ஸானைப் போல மின்சாரம் மற்றும் ஐசிஇ ஆகிய தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது தெரிகின்றது. எக்ஸ்யூவி300 மாடலை தழுவி உருவாக்கப்பட்டிருந்தாலும், தோற்றத்திலும், சிறப்பு வசதிகளிலும் பல மடங்கு மாறுபட்டதாக எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் கார் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் சாலையில் சோதனையோட்டத்தில் ஈடுபடும்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் உள்ளன. தோற்றம் மற்றும் சிறப்பு வசதிகளில் மட்டுமின்றி அளவிலும் எக்ஸ்யூவி 300 காரைக் காட்டிலும் எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் சற்று பெரியதாக உருவாக்கப்பட்டிருக்கின்றது. அதாவது எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரின் நீளம் 4.2 மீட்டர். இதனால் பயணிகளுக்கு கூடுதல் இட வசதி இருக்கும். இதேபோல் பூட் ஸ்பேஸும் இந்த காரில் மிக தாராளம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றுடன் கூடுதல் சிறப்பு வசதிகளாக ஹெட்லைட்டுடன் கூடிய டிஆர்எல்கள், முகப்பு பகுதியில் முழுமையாக மூடப்பட்ட கிரில், புதிய ஸ்டைலிலான டெயில் லேம்ப் மற்றும் டெயில் கேட் உள்ளிட்டவையும் எக்ஸ்யூவி 400 காரில் இடம் பெற்றிருக்கின்றன.
இதில் எந்த மாதிரியான தொழில்நுட்ப வசதிகள், பேட்டரி பேக் மற்றும் மின் மோட்டார் உடன் எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் விற்பனைக்கு வர இருக்கின்றது என்பதை துல்லியமாகத் தெரியவில்லை. அதேவேலையில், இந்தியாவில் தற்போது விற்பனையில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் டாடா நெக்ஸான் இவிக்கு போட்டியாளனாக இது எதிர்பார்க்கப்படுவதால், ஓர் முழு சார்ஜில் 400க்கும் அதிகமான கிமீ ரேஞ்ஜுடன் எக்ஸ்யூவி400 எதிர்பார்க்கப்படுகின்றது. டாடா நெக்ஸான் ஓர் முழு சார்ஜில் 312 கிமீ ரேஞ்ஜையும், நெக்ஸான் இவி மேக்ஸ் 437 கிமீ ரேஞ்ஜையும் வழங்கும் திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த எலெக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் ரூ. 14.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் கிடைக்கின்றது.






