மீண்டும் சேர்ந்த ஹிட் கூட்டணி

தமிழ் திரை உலகில் தனுஷ், யுவன், செல்வராகவன் கூட்டணிக்கு தனி மவுசு உண்டு. இதற்கு காரணம் தனுஷ் படத்திற்காக யுவன் போட்ட பாடல்கள் அத்தனையும் பெரிய அளவில் ஹிட் அடித்து இருக்கிறது.

நீண்ட ஆண்டுகள் இணையாமல் இருந்த இந்த ஜோடி தற்போது மீண்டும் நானே வருவேன் படத்தின் மூலம் இணைந்துள்ளது ரசிகர்களிடையே பெருத்த ஆர்வத்தை தூண்டியுள்ளது.

நடிகர் தனுஷ் தமிழ் திரையுலகம் தாண்டி ஹாலிவுட் வரை கால்பதித்துவிட்டார். ஆரம்பத்தில் சாதாரணமாக தனுஷை பார்த்தவர்கள் பின்னர் அவர் தன் நடிப்புத்திறமையை வெளிப்படுத்திய படங்களில் நடித்தவுடன் பெரிய அளவில் வரவேற்றனர். தமிழ் சினிமாவில் இளம் நாயகர்களில் குறுகிய காலத்தில் இரண்டு தேசிய விருதுகள் பெற்ற நடிகர் தனுஷ் மட்டுமே. ஆடுகளம், அசுரன் என அவர் இரண்டு படத்திற்காக வாங்கினார்.

தனுஷ் வாழ்க்கையில் பிரச்சினைகள் வந்தாலும் அதை பொருட்படுத்தாமல் அவர் முன்னேறி வருகிறார். இளம் முன்னணி நடிகர்களில் பி,சிசெண்டர்களில் அதிக ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளவர் தனுஷ். சமீபத்தில் இவர் ஒரு சாதனையை சத்தம் இல்லாமல் செய்துள்ளார். தற்போது ட்விட்டரில் தனுஷ் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு 11 மில்லியன் ஃபாலோயர்ஸ் வந்துள்ளனர். இத்தனை மில்லயன் ஃபாலோயர்ஸை வைத்துள்ள முதல் தமிழ் நடிகர் தனுஷ் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர் கூட்டம் இல்லை என்றால் இந்த அளவுக்கு இவரை பின்பற்றுபவர்கள் இருக்க வாய்ப்பில்லை.

தனுஷின் முதல் படம் அவர் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் வந்த துள்ளுவதோ இளமை. இதன் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, அடுத்து அவரது அண்ணனின் இயக்கத்தில் வந்த காதல் கொண்டேன் படமும் யுவன் இசையிலேயே வெளியானது. அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் வந்த புதுப்பேட்டை படத்திலும் யுவன் ஷங்கர் ராஜா தான் இசை. செல்வராகவன் கதையில் வந்த படம் யாரடி நீ மோகினி இதிலும் யுவன் ஷங்கர் ராஜா இசை, அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த மாலை நேரத்து மயக்கம் படத்துக்கு யுவன் இசை அமைத்தார். இந்த கூட்டணியின் கடைசி படம் இதுதான்.

அதன் பின்னர் செல்வராகவனும்கூட யுவனுடன் கூட்டணி சேரவில்லை. 8 ஆண்டுகள் கழித்து சூர்யாவை வைத்து இயக்கிய என்.ஜி.கே படத்தில் தான் மீண்டும் செல்வராகவன், யுவன் இணைந்தனர். ஆனால் மாரி 2 படத்தில் தனுஷுக்காக போட்ட ரவுடி பேபி பாடல் மிகப்பெரிய அளவில் யூடியூபில் ரீச் ஆனது அப்படிப்பட்ட காம்போ மீண்டும் இணையாதா என்கிற ஏக்கம் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. அந்த ஆசையை தற்போது நானே வருவேன் படம் மூலம் அந்த ஆசை நிறைவேறியுள்ளது. இந்த படம் பொன்னியின் செல்வன் படத்தோடு ரிலீஸ் ஆக இருக்கிறது.