Home News குறைந்த விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்கிறது ஏத்தர்

குறைந்த விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்கிறது ஏத்தர்

ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தற்போது ஏத்தர் 450x மற்றும் 450 பிளஸ் என இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. இவை தவிர்த்து குறைந்த விலை ஸ்கூட்டர் மாடல் ஒன்றையும் உருவாக்கி வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில், சோதனை செய்யப்படும் நிலையில், இதன் வெளிப்புற தோற்றம் தற்போது விற்பனை செய்யப்படும் ஏத்தர் ஸ்கூட்டர்களை போன்றே காட்சியளிக்கிறது. குறைந்த விலையின் காரணமாக 450X ஜென் 3 மாடலில் அளவில் சிறிய பேட்டரி மற்றும் மோட்டார் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். அந்த வகையில், இந்த ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மற்றும் ரேன்ஜ் குறைவாகவே இருக்கும்.

இது தவிர ஏத்தர் நிறுவன வழக்கப்படி இந்த ஸ்கூட்டரில் அதிநவீன அம்சங்கள் வழங்கப்படலாம். இதில் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, ஒடிஏ அப்டேட்கள், நேவிகேஷன் மற்றும் ஏராளமானவை அடங்கும். புதிய குறைந்த விலை ஸ்கூட்டர் மூலம் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஒலா எலெக்ட்ரிக் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்த ஒலா S1 மாடலுக்கு போட்டியை ஏற்படுத்தலாம். இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் திரும்பப் பெறப்பட இருப்பதை ஒட்டி வரும் நாட்களில் எலெக்ட்ரிக் வாகனங்கள் விலை கணிசமாக அதிகரிக்கும் எனத் தெரிகிறது. இந்த சூழலில் புதிய குறைந்த விலை ஸ்கூட்டர் ஏத்தர் நிறுவன விற்பனை சரிவதை தடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஏத்தர் நிறுவனத்தின் கடந்த ஆகஸ்ட் மாத விற்பனை ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. அதில் அந்நிறுவனம் ஒரே ஆண்டில் 3 மடங்கு வளர்ச்சியை சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டது. ஏராளமான மக்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்கும் முன்னணி நிறுவனமான ஏத்தர் தயாரித்து வெளியிடும் ஸ்கூட்டர்களின் டிசைன், ஸ்டைல், அதில் உள்ள அம்சங்கள் எல்லாம் மக்களை அதிகம் கவர்ந்துள்ளது. இதனால் இந்த நிறுவனத்தின் ஸ்கூட்டரின் விற்பனை படு வேகமாக வளர்ந்து கொண்டே இருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்நிறுவனம் தனது 50,000வது ஏத்தர் 450எக்ஸ் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் தனது விற்பனையை அதிகரிக்க புனே, சென்னை, ராஞ்சி பகுதியில் தனது எக்ஸ்பிரியன்ஸ் சென்டரை நிறுவியுள்ளது. இந்நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் மொத்தம் 6410 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனை செய்துள்ளது இது கடந்தாண்டு இதே ஆகஸ்ட் மாதம் நடந்த விற்பனையை ஒப்பிடும் போது 297 சதவீதம் விற்பனை அதிகம்.

இந்நிறுவனம் கேரள மாநிலத்தில் தனது விற்பனையில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் இந்நிறுவனம் கேரள மாநிலத்தில் விற்பனையான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் 34 சதவீத மார்கெட் பங்கை வைத்து முதலிடத்தில் இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் இதன் விற்பனையை அதிகரிக்கத் திட்டமிட்டு வருகிறது.

இது குறித்து ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் தலைமை பிஸ்னஸ் அதிகாரி ரவ்நீட் எஸ் போக்கேலா கூறும் போது : “நாங்கள் அதிகபட்சமாக 6410 ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளோம். எங்கள் வாகனங்களுக்கான டிமாண்ட் மார்கெட்டில் அதிகமாக இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு ஸ்கூட்டர்களை டெலிவரி செய்வதில் சப்ளை செயின் சிக்கல் இருக்கிறது. சப்ளை செயின் பிரச்சனைகளைச் சரி செய்யச் செய்ய எங்கள் விற்பனை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இதற்கிடையில் தயாரிப்பையும் வேகப்படுத்தியுள்ளோம். இதனால் காத்திருப்பு காலமும் குறையும். இந்த பண்டிகை காலத்தில் எங்கள் விநியோக திட்டத்தை விரிவுபடுத்தவுள்ளோம்” எனக் கூறினார்.