
முன்னணி எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஓலா, நவராத்திரி கொண்டாட்டத்தின் போது சிறப்பான விற்பனையைப் பெற்று இருக்கிறது. இந்நிறுவனம் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு ஸ்கூட்டரை விற்பனை செய்துள்ளனர். இது குறித்த முழு விபரங்களைப் பார்க்கலாம்.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவில் கடந்தாண்டு விற்பனைக்குக் கொண்டு வந்த ஓலா எலெக்ட்ரிக் எஸ்1 ப்ரோ ஸ்கூட்டருக்கு மார்கெட்டில் நல்ல வரவேற்பு இருக்கிறது. மக்கள் பலர் இந்நிறுவனத்தின் ஸ்கூட்டர்களை விரும்பி வாங்குகின்றனர்.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் துவங்கப்பட்டபோது வழக்கமான டீலர் ஷிப் முறையில் இல்லாமல் நேரடியாக வாடிக்கையாளர்களிடம் ஆன்லைன் முறையில் விற்பனை செய்தது. இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஏராளமான மக்கள் ஆன்லைனிலேயே இந்த ஸ்கூட்டர்களை புக் செய்யத் துவங்கினர். இந்த ஸ்கூட்டர்களை வாங்கியவர்களின் வீடுகளுக்கே சென்று ஸ்கூட்டர்கள் டெலிவரி செய்யப்பட்டது.
இந்நிலையில் சில வாடிக்கையாளர்கள் நேரடியாக ஸ்கூட்டரை பார்த்து வாங்கும் அனுபவம் இல்லாததைக் குறையாகக் குறிப்பிட்டிருந்தனர். இதையடுத்து ஓலா நிறுவனம் நாட்டின் பல இடங்களில் எக்ஸ்பிரியன்ஸ் சென்டர்களை திறந்தது. இங்கு வாடிக்கையாளர்கள் நேரடியாக வந்து வாகனத்தை ஓட்டிப்பார்த்து இந்த ஸ்கூட்டரை புக் செய்யலாம் என அறிவித்தனர்.
இதனையடுத்து தற்போது ஓலா எக்ஸ்பிரியன்ஸ் சென்டர்களுக்கு மக்கள் வந்து வானகத்தை ஓட்டி பார்த்து புக் செய்கின்றனர். இந்நிலையில் ஓலா நிறுவனம் நவராத்திரியை முன்னிட்டு தனது வாகனங்களுக்கு ரூ10 ஆயிரம் தள்ளுபடியை அறிவித்தது. இது பண்டிகை காலம் என்பதால் பலர் வாகனங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். பொதுவாக ஆட்டோமொபைல் துறைக்குத் தீபாவளியை ஒட்டித்தான் விற்பனையில் அதிகரிக்கும்.
இந்நிலையில் நவராத்திரியை முன்னிட்டு தள்ளுபடி அறிவித்தவுடன் விற்பனை குவியத் துவங்கியது. இது குறித்து அந்நிறுவனத்தின் தலைமை மார்கெட்டிங் அதிகாரி அனுஷல் கான்தல்வால் கூறும் போது, “இந்த நவராத்திரி காலத்தில் விற்பனை 4 மடங்கு உயர்ந்துள்ளது. இதற்கு 3 விஷயங்கள் தான் முக்கியமான காரணம். முதல் விஷயம் இந்த கேட்டகிரியிலேயே சிறந்த ஸ்கூட்டரை ஓலா விற்பனை செய்கிறது, இரண்டாவது, கஸ்டமருக்காக திறக்கப்பட்ட எக்ஸ்பீரியன்ஸ் செண்டர், மூன்றாவது ஃபைனான்ஸ் சலுகைகளை அறிவித்தது. இது முதன் முறையாக ஸ்கூட்டர் வாங்குபவர்கள் அல்லது பெட்ரோல் ஸ்கூட்டரிலிருந்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாற நினைப்பவர்களுக்கு உதவும். இந்த அக்டோபர் மாத விற்பனை வெகு சிறப்பாக இருக்கும்” எனக் கூறினார்.
இந்த நவராத்திரி காலத்தில் ஓலா ஸ்கூட்டர்களை பலர் வாங்கியுள்ளனர். இந்த விற்பனை, ஆன்லைன் மற்றும் அந்நிறுவனம் இந்தியா முழுவதும் 20 இடங்களில் வைத்துள்ள, எக்ஸ்பிரியன்ஸ் சென்டர்கள் மூலம் நடந்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு நிமிடத்திற்கு ஒரு ஸ்கூட்டர் என்ற ரீதியில் விற்பனையாகியுள்ளது. ஓலா நிறுவனம் 2023ம் மார்ச் மாதத்திற்குள் இந்தியாவில் மொத்தம் 200 எக்ஸ்பிரியன்ஸ் சென்டர்களை திறக்க முடிவு செய்துள்ளது.
ஓலா நிறுவனம் கடந்த 2021 ஆகஸ்ட் 15ம் தேதி தனது முதல் ஸ்கூட்டரான ஓலா எஸ்1 ப்ரோ ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தி அதைக் கடந்தாண்டு டிசம்பர் மாதம் விற்பனைக்குக் கொண்டு வந்தது. பலருக்கு இந்த ஸ்கூட்டரை பார்த்த மாத்திரத்திலேயே பிடித்துவிட்டது. பலர் இந்த ஸ்கூட்டரை வாங்கும் மன நிலைக்கு வந்து இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்ததும் புக் செய்யத் துவங்கிவிட்டனர். இந்நிலையில் இந்த ஸ்கூட்டர் அறிமுகமாகி 1 ஆண்டு ஆன நிலையில், கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி ஓலா நிறுவனம் ஓலா எஸ்1 ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது.
இந்த இரண்டு ஸ்கூட்டர்களையும் ஓலா நிறுவனம் தற்போது விற்பனை செய்து வருகிறது. இந்த இருண்டு ஸ்கூட்டர்களுக்கும் பண்டிகை காலத்தை முன்னிட்டு தற்போது ரூ10,000 தள்ளுபடியை அறிவித்துள்ளது. மேலும் குறைந்த வட்டியில் கடன் வசதி, புக் செய்த 7 நாளில் டெலிவரி உள்ளிட்ட பல வசதிகளை இந்நிறுவனம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.