ஆதிபுருஷ் படத்திற்கு அடி மேல் அடி

5 மொழிகளில் தயாராகி வரும் ஆதிபுருஷ் திரைப்படத்தின் டீசர் வெளியானதில் இருந்து இந்த படத்திற்கு அடி மேல் அடி விழுந்தபடி இருக்கிறது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், தற்போது இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’. ராமாயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ளார். மேலும், கிரித்தி சனோன், சைப் அலி கான், சன்னி சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டி சீரிஸ் தயாரித்துள்ள இந்தப் படம் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டிருந்தது. இந்த டீசர் வெளியிட்டு விழா அயோத்தியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் பிரபாஸ், கிரித்தி சனோன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

ஆதிபுருஷ் படத்தின் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்திருந்தனர். ஆனால் இப்படத்தின் டீசரை பார்த்த ரசிகர்கள் கடும் கோபத்தில் ஆளாகினர். இந்த படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் மிகுந்த கிண்டலுக்கு ஆளாகி வருகிறது. இப்படத்தில் ராவணன் கதாபாத்திரம் பெரும் எதிர்ப்பை சந்தித்து உள்ளது. மோசமான VFX படத்திற்கு பெரும் பின்னடைவாக உள்ளது.

ஆதிபுருஷ் இயக்குனர் ஓம் ராவத் மீது நெட்டிசன்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பாகுபலி படத்தை கொடுத்த பிரபாஸ் இப்படி ஒரு தரமற்ற படத்தை எடுத்திருக்க கூடாது என கருத்துக்களை பலரும் தெரிவித்து வருகின்றனர். ஆதிபுருஷ் டீசரின் கிராபிக்ஸ் காட்சிகளை பார்த்த நெட்டிசன்கள் இதை விட கார்ட்டூன் நெட்வொர்க் சீரிஸ் தான் சிறந்தது கார்ட்டூன் நெட்வொர்க்கில் வெளியிடுங்கள் என்று கூறி வருகின்றனர்.

இதற்கிடையில் பிரபாஸ் கோபத்தில் இயக்குனர் ஓம் ரவுத்தை அழைத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில் ஆதிபுருஷ் பட டீசரில் சர்ச்சைக்குறிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும், அனுமன் குறித்த சர்ச்சைக்குறிய காட்சிகளை நீக்காவிடில் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம் என மத்தியப்பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்து இருந்தார்.

தற்போது அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் தலைமை குருவான சத்யேந்திர தாஸ், ஆதிபுருஷ் படத்திற்கு எதிரான தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். ஆதிபுருஷ் திரைப்படத்தில் ராமர் மற்றும் அனுமனை தவறாக சித்தரித்துள்ளனர். ஆகவே அதன் வெளியீட்டை தடை செய்ய வேண்டும் என கண்டித்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரம்மாண்டமாக திரையரங்குகளில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், இப்படியொரு பெரிய சிக்கல் படத்திற்கு எழுந்துள்ளது படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.