மொபைல் தயாரிப்பாளர்களுக்கு இந்திய அரசு புதிய உத்தரவு

சாம்சங், சியோமி, ஆப்பிள் போன்ற மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களை கவலையடையச் செய்யும் வகையில், இந்திய அரசாங்கத்தின் ஒரு புதிய உத்தரவு வெளியாகி இருப்பதாய்த் தெரிகிறது!

இந்திய அரசின் சமீபத்திய உத்தரவை பற்றி அறிந்துகொள்ளும் முன்னர், நீங்கள் நேவிக் (NavIC) என்றால் என்ன என்பதை பற்றி அறிந்துகொள்ள வேண்டும்! நேவிக் (NavIC) அல்லது நேவிகேஷன் வித் இந்தியன் கான்ஸ்டெல்லேஷன் (Navigation with Indian Constellation) என்பது ஜிபிஎஸ்-க்கு (GPS) மாற்றாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவால் (ISRO) உருவாக்கப்பட்ட ஒரு சுயாதீனமான நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் (Independent Navigation Satellite System) ஆகும்.

பொதுவான வாகன கண்காணிப்பில் பயன்படுத்தப்பட்டு வரும் நேவிக் ஆனது, ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு, Terrestrial Network Connectivity இல்லாத இடங்களில் அவசர எச்சரிக்கைகளை வழங்கவும், இயற்கை பேரழிவுகள் தொடர்பான தகவல்களை கண்காணிக்கவும் கூட பயன்படுத்தப்படுகிறது.

கட்டாயமாகும் நேவிக்!

மிகவும் குறைந்த அளவில் பயன்பாட்டில் இருக்கும் நேவிக்கை, அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் முனைப்பின் கீழ், வருகிற 2023 ஆம் ஆண்டு முதல், அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் நேவிக் சேவைக்கான ஆதரவு கட்டாயமாக சேர்க்கப்பட வேண்டும் என்று, ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களுக்கு இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது போல் தெரிகிறது!
ராய்ட்டர்ஸ் வழியாக கிடைத்த தகவலின்படி, இந்திய அரசாங்கத்தின் இந்த உத்தரவு / தேவையானது, சாம்சங், சியோமி மற்றும் ஆப்பிள் போன்ற நிறுவனங்களை கவலை அடைய செய்துள்ளது. ஏனென்றால், தத்தம் ஸ்மார்ட்போன்களின் நேவிக்கிற்கான ஆதரவை கொண்டு வர, வன்பொருள் மாற்றங்கள் தேவைப்படும்; அதன் விளைவாக ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அதிக செலவுகள் மற்றும் இடையூறுகளை சந்திக்க கூடும்!

எதற்காக Navic?

இந்திய அரசாங்கத்தின் கூற்றுப்படி, ஜிபிஎஸ் (GPS) மற்றும் க்ளோனாஸ் (GLONASS ) போன்ற நேவிகேஷன் சிஸ்டம்கள் – நம்பகமானதாக இல்லை! ஏனெனில் அவைகள் (ஜிபிஎஸ் 7 க்ளோனாஸ்), அந்தந்த நாடுகளின் பாதுகாப்பு முகமைகளால் (Defence Agencies) இயக்கப்படுகின்றன. எனவே அவைகள், தன் மக்களுக்கு பாதுகாப்பானதாக இருக்காது என்று இந்தியா நம்புகிறது!
GPS என்பது அமெரிக்காவிற்கு சொந்தமான ஒரு நேவிகேஷன் சேவை ஆகும். ஜிபிஎஸ்-ஐ போலவே, வேறு சில முக்கியமான உலகளாவிய நேவிகேஷன் சிஸ்டம்களும் உள்ளன. அவைகள் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த கலிலியோ (Galileo), ரஷ்யாவிற்கு சொந்தமான க்ளோனஸ் (GLONASS) மற்றும் சீனாவின் பெய்டோ (Beidou) ஆகும். ஜப்பானை மையமாக கொண்டு QZSS என்ற ஒரு பிராந்திய நேவிகேஷன் சிஸ்டமும் உள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டிலேயே 174 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் அங்கீகரிக்கப்பட்ட நேவிக் ஆனது 2011 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது 2018 ஆம் ஆண்டில் தான் செயல்பாட்டுக்கு வந்தது. தற்போது NavIC-இன் கீழ் எட்டு செயற்கைக்கோள்கள் உள்ளது. இதன் மூலம் இந்தியாவின் முழு நிலப்பரப்பையும் துல்லியமாக கண்டுணரலாம்.