2023ல் டிஸ்னி-ஹாட்ஸ்டாரில் வெளியான தமிழ் படங்கள்

கொரோனா காலகட்டத்தில் தியேட்டர்கள் மூடிக்கிடந்ததால், OTT நிறுவனங்களின் வளர்ச்சி அதிகரித்தது. அப்போதைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கிக் கிடந்ததால், OTTயில் படங்களை பார்த்துக் குவித்தனர். தமிழ் மட்டுமல்லாது, பிற இந்திய மொழி படங்களையும் கண்டு களித்தனர். இன்னும் சிலர் ஒருபடி மேலேபோய் இந்தியா தாண்டி கொரியன், ப்ரெஞ்ச், சீன உள்ளிட்ட உலக மொழிப்படங்களையும் பார்க்கத் தொடங்கினர். இதனால் OTT சேனல்களுக்கு கண்டெண்ட்க்கான பஞ்சம் ஏற்பட்டது என்று கூடச் சொல்லலாம். அதனால் கிடைத்த படங்களை போட்டி போட்டுக் கொண்டு வாங்கிக் குவிக்கத் தொடங்கின. ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

படங்களின் வரத்து அதிகரித்து விட்டது. அதேநேரத்தில் ஒரு படத்தை OTT நிறுவனம் வாங்கினால், அதை மொழி மாற்றம் செய்து பல மொழிகளில் வெளியிட்டு வருகிறது. இதனால் படங்களை வாங்குவதும் குறைந்துவிட்டது. அதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக முன்னணி OTT நிறுவனமான டிஸ்னி-ஹாட்ஸ்டார் இந்த ஆண்டு (2023) கடந்த 7 மாத காலத்தில் வெறும் 4 நேரடித் தமிழ் படங்களை மட்டுமே வெளியிட்டு இருக்கிறது.  இவையும் கூட பிரபல நட்சத்திரங்களை வைத்து எடுக்கப்பட்ட படங்கள் ஆகும். சிறிய பட்ஜெட் படங்கள், புதுமுக நட்சத்திரங்களின் படங்கள் எதையும் இந்நிறுவனம் வெளியிடவில்லை.

 

டிஸ்னி-ஹாட்ஸ்டாரில் 2023ல் வெளியான தமிழ் படங்கள்

  • சொப்பன சுந்தரி
  • ரன் பேபி ரன்
  • பிச்சைக்காரன் 2
  • குட்நைட்

 

சொப்பன சுந்தரி

சொப்பன சுந்தரி இயக்குனர் எஸ் ஜி சார்லஸ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ஷங்கர், லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், கருணாகரன் என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அஜ்மல் தஹ்ஸீன் இசையமைத்துள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு நகைக்கடையில் வேலைபார்த்து குடும்பத்தை சமாளித்து வருகிறார்.  இந்த சமயத்தில் இவர்களுக்கு 10 லட்சம் மதிப்புள்ள ஒரு கார் பரிசாக கிடைக்கிறது.  இதை வைத்து தனது அக்காவிற்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று யோசிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ், அந்த சமயத்தில் இவரது அண்ணன் கருணாகரன் அந்த கார் தனக்கு தான் சொந்தம் என்று பிரச்னை செய்கிறார்.  இதனால் கார் போலீசிடம் சிக்கி கொள்கிறது.  இறுதியில் அந்த காரை வெளியில் எடுத்தார்களா? அந்த காருக்குள் என்ன இருந்தது என்பது தான் சொப்பன சுந்தரி படத்தின் கதை.

 

ரன் பேபி ரன்

ஜியென் கிருஷ்ணகுமார் எழுதி இயக்கிய2023 ஆம் ஆண்டு வெளியான திரில்லர் படம் ரன் பேபி ரன். இப்படத்தில் ஆர்ஜே பாலாஜி , இஷா தல்வார் , ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

மருத்துவ மாணவி சோஃபியா (ஸ்ம்ருதி வெங்கட்), கல்லூரிக் கட்டிடத்தில் இருந்து விழுந்து இறக்கிறார். அவரது தோழி தாரா (ஐஸ்வர்யா ராஜேஷ்) தன்னைத் துரத்தும் ரவுடிகளிடம் இருந்து தப்பிக்க, வங்கி ஊழியர் சத்யாவின் (ஆர்ஜே பாலாஜி) உதவியை நாடுகிறார். உதவும் சத்யா, சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். இந்தப் பிரச்சனையில் சிக்கிய கார் ஓட்டுநர் ஒருவர் தற்கொலை செய்துகொள்ள, அதற்கான காரணத்தைத் துப்புத் துலக்கும் காவல்துறை, சத்யாவையும் நெருங்குகிறது. இதனால், சத்யாவைக் கொல்ல முயற்சிகள் நடக்கின்றன. அவருக்கு என்ன ஆனது? தாரா யார்? சோஃபியாவின் இறப்புக்கு என்ன காரணம்? என்பதற்கு விடை சொல்கிறது மீதிக் கதை.

 

பிச்சைக்காரன் 2

இந்தியாவின் பெரும் பணக்காரர் விஜய் குருமூர்த்தி (விஜய் ஆண்டனி). ஒரு லட்சம் கோடிக்கு அதிபதியான அவர் சொத்துகளை அடைய நினைக்கிறார்கள், நண்பர்கள் அரவிந்த் (தேவ் கில்), இளங்கோ (ஜான் விஜய்) குடும்ப மருத்துவர் சிவா (ஹரீஷ் பெரேடி). அதற்காக அறுவை சிகிச்சை மூலம் அவர் மூளையை மாற்ற முடிவு செய்கிறார்கள். அப்போது அவர் ரத்த குரூப்பை கொண்ட, சத்யா (விஜய் ஆண்டனி) என்ற பிச்சைக்காரர் சிக்குகிறார். அவரை துபாய் அழைத்து வந்து மூளை மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் பிச்சைக்காரன் மூளையை, தொழிலதிபருக்கு வைக்கிறார்கள். பிறகு என்ன நடக்கிறது? அந்தப் பிச்சைக்காரர் யார்? அவர் என்ன செய்கிறார்? என்பதுதான் கதை.

விஜய் ஆண்டனி முதல்முறை இயக்குனராக எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில்விஜய் ஆண்டனி, காவ்யா தாப்பர் , ராதா ரவி , யோகி பாபு , ஹரீஷ் பெராடி , தேவ் கில் , ஜான் விஜய் , ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் மன்சூர் அலி கான் ஆகியோர் நடித்துள்ளனர்.  படத்திற்கான படத்தொகுப்பு மற்றும் இசையமைப்பையும் விஜய் ஆண்டனியே செய்துள்ளார்.  ஓம் நாராயண் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

 

குட்நைட்

ஐடி-யில் பணியாற்றும் மோகனுக்கு (மணிகண்டன்), குறட்டைதீராத பிரச்சினையாக இருக்கிறது. இதனால், காதலும் கைவிட்டுப் போகிறது. இந்நிலையில்  மோகனும் பெற்றோரை இழந்து தனியாக வாழும் அனுவும் காதலித்துத் திருமணம் செய்துகொள்கிறார்கள். மோகனின் குறட்டையால் தூக்கம் இழக்கும் அனுவுக்கு உடல்நலப் பிரச்சினைகள் வருகின்றன. குற்ற உணர்வால், தனது குறட்டை சரியாகும் வரை தனி அறையில் தூங்குகிறார் மோகன் . இதையடுத்து நடக்கும் விஷயங்கள் இருவர்உறவிலும் விரிசலை ஏற்படுத்துகின்றன. இறுதியில் குறட்டைப் பிரச்சினை தீர்ந்ததா? இருவரும் திருமண வாழ்வை நிம்மதியாகத் தொடர்ந்தார்களா என்பது மீதிக் கதை.

இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் மணிகண்டன், மீதா ரகுநாத், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல் என பலர் நடித்திருக்கும் இப்படத்தினை தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் மற்றும் யுவராஜ் கணேசன் இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார்.