
இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பன்ச் காரை, கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் பன்ச் காரை விற்பனைக்கு கொண்டு வந்தது. இது மைக்ரோ எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். டாடாவின் 4வது எலக்ட்ரிக் காராக வருகிறது ‘பஞ்ச்.
முதல் காரணம்
அறிமுகம் செய்யப்பட்ட உடனேயே டாடா பன்ச் கார் ‘ஹிட்’ ஆகி விட்டது. தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் ஒவ்வொரு மாதமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பன்ச் கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. டாடா பன்ச் காருக்கு வாடிக்கையாளர்கள் இந்த அளவிற்கு பிரம்மாண்டமான வரவேற்பை வாரி வழங்கி வருவதற்கு 2 முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம்.. குறைவான விலை!
இரண்டாவது காரணம்
தற்போதைய நிலையில் டாடா பன்ச் காரின் ஆரம்ப விலை வெறும் 6 லட்ச ரூபாய் மட்டுமே. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். இதுதவிர குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில் டாடா பன்ச் கார் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது. டாடா பன்ச் காருக்கு கிடைத்துள்ள பிரம்மாண்டமான வரவேற்பிற்கு இது இரண்டாவது காரணம் ஆகும்.
எலக்ட்ரிக் வெர்ஷன்
மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளதால், பன்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. தற்போது அந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. டாடா பன்ச் இவி (Tata Punch EV) என்ற பெயரில், இந்த புதிய மாடல் விற்பனைக்கு வரவுள்ளது. இதில், EV என்பது Electric Vehicle என்பதை குறிக்கிறது. டாடா பன்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு வருவது உறுதியாகியுள்ளதால், வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
எப்போது?
டாடா பன்ச் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வருவதை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உறுதி செய்து விட்டாலும், இந்த புதிய மாடலின் அறிமுக தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அனேகமாக 2023ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் டாடா பன்ச் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 2023ம் ஆண்டின் ஜூலை – செப்டம்பர் காலகட்டத்தில் டாடா பன்ச் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம். இது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நான்காவது எலெக்ட்ரிக் காராக இருக்கும். முன்னதாக நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் (Nexon EV), டிகோர் எலெக்ட்ரிக் கார் (Tigor EV) மற்றும் டியாகோ எலெக்ட்ரிக் கார் (Tiago EV) என 3 மாடல்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.
ப்ளாட்பார்ம்
டாடா பன்ச் காரானது, ஆல்ஃபா பிளாட்பார்ம் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. டாடா பன்ச் எலெக்ட்ரிக் காரில், இதே பிளாட்பார்ம்மின் மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட வெர்ஷன் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜிப்ட்ரான் பவர்ட்ரெயினும் இடம்பெற்றிருக்கும். குறைந்தபட்சம் 2 வகையான பேட்டரி ஆப்ஷன்களுடன் டாடா பன்ச் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அம்சங்கள்
இதுதவிர 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் போன்ற வசதிகளும் டாடா பன்ச் எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தற்போது 100 எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையாகிறது என்றால், அதில் 80-85 கார்கள், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடையதாகதான் இருக்கும். அந்த அளவிற்கு இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வலுவாக காலூன்றி விட்டது. இந்த சூழலில் பன்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனும் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளதால், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆதிக்கம் மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக இருக்கிறது.