அதிக பலன்களைத் தரும் திட்டங்களை மற்ற நிறுவனங்களை விட குறைந்த விலையில் வழங்கி வருகிறது ஜியோ. அதன் காரணமாக மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களை விட அதிக வாடிக்கையாளர்களைப் பெற்று இந்தியாவில் முதல் இடத்தில் இருக்கிறது. இரண்டாம் இடத்தில் பார்தி ஏர்டெல் நிறுவனமும், மூன்றாம் இடத்தில் வோடபோன் – ஐடியா நிறுவனமும் இருக்கின்றன.
கட்டண உயர்வு
இந்த தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஒவ்வொரு வருடமும் தங்களது வருமானத்தைப் பொறுத்து கட்டண விகிதங்களை மாற்றி அமைக்கும். அந்த வகையில், ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் கட்டண உயர்வு அறிவித்த பின்பு தான் ஜியோ நிறுவனம் தனது ரீசார்ஜ் கட்டண உயர்வினை அறிவிக்கும். ஆனால் இந்த ஆண்டு ஜியோ நிறுவனம் விரைவில் கட்டண உயர்வு அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
வருவாய் அறிக்கை
TRAI எனப்படும் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் சமீபத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சந்தாதாரர்கள், வருவாய் குறித்த சில அறிக்கையை வெளியிட்டது. இதில் ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களை விட ஜியோ நிறுவனம் அதிகமான வருவாயைப் பெற்றுள்ளது. அறிக்கையின்படி, ஜியோ நிறுவனம் 4279 கோடி வருவாயும், ஏர்டெல் நிறுவனம் 2179 கோடி வருவாயும் பெற்றுள்ளன. அதாவது ஏர்டெல் நிறுவனத்தை விட இரண்டு மடங்கு அதிக லாபத்தை ஜியோ நிறுவனம் பெற்றுள்ளது.
ARPU
ஆனாலும் ARPU எனப்படும் சராசரியாக ஒரு வாடிக்கையாளரிடம் கிடைக்கும் வருவாயைப் பொறுத்தே இங்கு கட்டண உயர்வு தீர்மானிக்கப்படுகிறது. அந்தவகையில் ஜியோ ARPU 108 ரூபாய் எனவும், ஏர்டெல் ARPU 190 ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஜியோ நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் லாபம் அதிகமாக இருக்கிறது என்றாலும் கூட, ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து கிடைக்கும் வருவாய் மிகவும் குறைவாகவே உள்ளது. தற்போது ஏர்டெல் நிறுவனத்தின் ARPU வருவாய் நல்ல இடத்தில் என்றே கூறலாம்.
ARPU வருவாயை வைத்து தான் நிறுனவங்கள் ஒவ்வொரு ஆண்டும் கட்டண உயர்வை அறிவிக்கிறது. தற்போது ஜியோவின் ARPU வருவாய் குறைவாக இருப்பதால் விரைவில் இந்நிறுவனம் கட்டண உயர்வு கொண்டுவரும் நிலை ஏற்பட்டுள்ளது. 4ஜி கட்டணங்களை உயர்த்தினால் அது சரியாக இருக்காது. எனவே புதிதாக அறிமுகமாகி இருக்கும் ஜியோ 5ஜி சேவையின் கட்டணங்களை உயர்த்த வாய்ப்பு இருக்கிறது. ஆனால், ஜியோ எந்த மாதிரியான முடிவை எடுக்கும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். இந்நிலையில் ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் எந்த விதமான கட்டண உயர்வு இல்லாமல், சந்தாதார்களின் எண்ணிக்கையை மட்டும் அதிகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது தொடர்பான விவரங்கள் விரைவில் வெளிவரும் என்று எதிரிபார்க்கலாம்.
மேலும் இப்போது ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனர்கள் தனது 5ஜி சேவையை படிப்படியாக பல நகரங்களுக்கு விரிவுபடுத்தும் சேவையை தொடங்கியுள்ளன.






