அதிசயம்! ஆச்சரியம்!


ரஜினி, கமல், ஷாரூக்கான், விஜய் படப்பிடிப்புகள் ஒரே நேரத்தில் சென்னையில் நடக்கின்றன.

வழக்கமாக பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் பெரும்பாலும் செட்டுக்குள்ளேயே எடுத்து முடிக்கப்படும். சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான `தர்பார்’, `அண்ணாத்த’ படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் நடந்தன. அதிலும் ராமோஜிராவ் ஸ்டூடியோவில் ஒரே மொத்தப் படத்தையும் செட்டுக்குள்ளேயே எடுத்து வந்துவிடுவார்கள். ஆனால், அதற்கு நேர்மாறாக, ரஜினி – நெல்சன் கூட்டணியின் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு நேற்று சென்னையில் தொடங்கியுள்ளது. ராயப்பேட்டை உட்லாண்ட்ஸ் தியேட்டர் அருகே படப்பிடிப்பு நடந்துவருகிறது. ரஜினி பங்கேற்று நடித்து வருகிறார். பனையூரிலும் செட் அமைத்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அங்கே படப்பிடிப்பு நடக்க உள்ளது.

கமல், ஷங்கர் கூட்டணியின் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்குகிறது. சில மாதங்களுக்கு முன்னர், படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து, உயிரிழப்புகளின் காரணமாக அதன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பின் கமல், ஷங்கர் இருவரும் வெவ்வேறு படங்களுக்குப் பணியாற்றப் போய்விட்டனர். சிவகார்த்திகேயனின் ‘டான்’ பட வெற்றிவிழாவின் போதுதான் உதயநிதி, லைகாவின் சுபாஷ்கரனிடம் ‘இந்தியன்2’ படத்தை மீண்டும் ஆரம்பிப்பது பற்றிப் பேசினார்.

இந்நிலையில்தான் ‘இந்தியன்2’-ல் நடித்த கமல், காஜல் அகர்வால் உட்பட படத்தின் நடிகர் நடிகர்களிடம் மீண்டும் தேதிகள் கேட்கப்பட்டது. சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் பிரமாண்டமான செட் அமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன. இந்நிலையில் நாளை ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்குகிறது. சென்னைப் பல்கலைக்கழகம் அருகே உள்ள ஒரு பழைமை வாய்ந்த கட்டடத்தில்தான் ‘இந்தியன்2’ நாளை காலை ஆரம்பிக்கிறது. பிரமாண்டமான பூஜைகள் எதுவுமின்றி நேரடியாக படப்பிடிப்பு நடக்கிறது. கமல் இப்போது அமெரிக்காவில் இருக்கிறார். வருகிற 2-ம் தேதிதான் அவர் சென்னை வருகிறார். அதன்பின், படப்பிடிப்பில் பங்கேற்கிறார்.

இன்னொரு ஆச்சரியம், அட்லீ- ஷாரூக்கான் காம்போவின் ‘ஜவான்’ படப்பிடிப்பு சென்னையில் உள்ள பனையூரில் நேற்று தொடங்கியது. அங்கே வீடு ஒன்றை செட் போட்டுள்ளனர். ஷாரூக்கான் நடிக்கும் காட்சிகள் சென்னையில் தொடர்ந்து இருபது நாள்கள் எடுக்கப்பட இருக்கிறது. இதனால் படப்பிடிப்பு அரங்கில் பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுவாக (பவுன்சர்களின் கூட்டம்) உள்ளது.

இதற்கிடையே விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் அடுத்த ஷெட்யூல் மீண்டும் சென்னையில் நடக்க இருக்கிறது.

முன்னணி ஹீரோக்களின் படப்பிடிப்புகள் சென்னையில் நடப்பதால், பெஃப்சி தொழிலாளர்கள் மனங்கள் குளிர்ந்துள்ளதாகச் சொல்கிறார்கள்.