
உலகின் மிகவும் பிரபலமான உடனடி செய்தி பகிர்வு தளமாக மெடாவின் வாட்ஸ்அப் இருக்கிறது. வாட்ஸ்அப் பயனர்களின் தேவையறிந்து பல்வேறு புதுப்புது அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதேநேரத்தில் யாரும் இந்த தளத்தை தவறாகப் பயன்படுத்தவிடாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளையும் இந்நிறுவனம் எடுத்து வருகிறது.
மத்திய அரசும் தொடர்ந்து இதற்கான நிபந்தனைகளை உறுதி செய்து வருகிறது. அதில் ஒன்று மாதாந்திர இணக்க அறிக்கை ஆகும். அதன்படி வாட்ஸ்அப் நிறுவனம் மாதந்தோறும் எடுக்கும் நடவடிக்கையை இணக்க அறிக்கையாக சமர்பித்து வருகிறது. இணைக்க அறிக்கையில் தவறான வாட்ஸ்அப் கணக்குகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் பயனர்கள் அளிக்கும் புகார்கள் குறித்து தெரிவிக்கப்படுகின்றன.
அதன்படி தற்போது வெளியான அறிக்கையில், ஜூலை மாதத்தில் மட்டும் இந்தியாவில் 24 லட்சம் கணக்குகளை நீக்கியதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. இதுவரை வெளியான மாதாந்திர அறிக்கையில் கடந்த மார்ச் மாதத்தில் தான் அதிக கணக்குகள் தடைசெய்யப்பட்டு இருந்தது. அம்மாதத்தில் 18 லட்சம் கணக்குகள் தடை செய்யப்பட்டு இருந்த நிலையில், தற்போது ஜூலை மாதத்தில் 24 லட்சம் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன.
ஜூலை மாதத்தில் மட்டும் இந்தியாவில் கிட்டத்தட்ட 24 லட்சம் கணக்குகளை வாட்ஸ்அப் நீக்கியதாக அதன் மாதாந்திர இணக்க அறிக்கையில் தெரிவித்துள்ளது. பயனர் புகார்கள், தவறான தகவல் பரப்புதல் போன்ற கணக்குகளும் இதில் அடக்கம். மெட்டாவுக்கு சொந்தமான செய்தியிடல் தளமான வாட்ஸ்அப் IT விதிகளின் கீழ், வெளியிடப்பட்ட மாதாந்திர அறிக்கையில் இதை குறிப்பிட்டுள்ளது.
அதேபோல் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் மொத்தம் 2.7 கோடி பதிவுகள் ஜூலை மாதத்தில் மட்டும் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மத்திய அரசு சமூக வலைதளங்களுக்கு என புதிய சட்டத்தை கொண்டு வந்தது. அதில் முக்கியமான ஒன்று என்னெவெனில் 50 லட்சத்துக்கும் அதிகமான பயனர்களை கொண்ட தளங்கள், பெறப்பட்ட புகார்கள் மற்றும் அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 45 நாட்களுக்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதாகும். இதன்படி வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து மாதந்தோறும் அறிக்கையை சமர்பித்து வருகிறது.
ஆன்லைன் மோசடி, மத ரீதியான அவதூறுகள், பாலியல் குற்றச்சாட்டு போன்ற பல்வேறு புகார்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருக்கிறது. எனவே மாதத்திற்கு எத்தனை புகார்கள் வந்தன அவற்றில் எத்தனை தீர்க்கப்பட்டன போன்ற தகவலும் அறிக்கையில் குறிப்பிட்டிருக்க வேண்டும் என மத்திய அரசு சமூகவலைதளத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவின் இறையாண்மை பாதிப்பு, அரசு பாதுகாப்பு விவகாரம், பாலியல் புகார் போன்ற சர்ச்சை பதிவுகளை அதிகாரிகள் சுட்டிக்காட்டும் பட்சத்தில் 36 மணி நேரத்திற்குள் அந்த உள்ளடக்கத்தை அகற்ற வேண்டும் எனவும் சமூகவலைதளங்களுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.
இதையடுத்து பயனர்களை குறைகளை நேரடியாக அறிவிக்க வாட்ஸ்அப் வழிவகை செய்திருக்கிறது. பயனர்கள் புகார்களை தெரிவிப்பதற்கு grievance_officer_wa@support.whatsapp.com என்ற மின்னஞ்சல் முகவரியை அறிவித்துள்ளது. இந்த மின்னஞ்சல் முகவரிக்கு நீங்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம். அதேபோல் இந்திய குறைதீர்க்கும் அதிகாரிகளுக்கு தபால் மூலம் கடிதம் அனுப்பலாம். துஷ்பிரயோகம் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் செயல்பாட்டை நிறுத்துவதற்கு வாட்ஸஅப் அதன் சொந்தக் கருவிகளைக் கொண்டு கண்காணித்து வருகிறது.
தவறாக பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப் கணக்குகளை முடக்குவதற்கு நிறுவனம் தனிச்சையாகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுகுறித்து வாட்ஸ்அப் தெரிவிக்கையில் “தவறான கணக்குகளை விரைவாக கண்டறிந்து அதை நிறுத்துவதே எங்கள் குறிக்கோள், 24/7 என்ற அடிப்படையில் தவறான கணக்குகளை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதற்கான இயந்திர கற்றல் அமைப்புகள் தங்களிடம் உள்ளன” எனவும் குறிப்பிட்டுள்ளது.
