
இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் 2025 வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என யமஹா இந்தியா நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி யமஹா நிறுவனம் இந்தியாவுக்கென பிரத்யேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை உருவாக்கி வருவதாகத் தெரிகிறது.
மேலும் இந்த ஸ்கூட்டர் முழுமையாக உருவாக்கப்பட்ட நிலையில், இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு, இங்கு அசெம்பில் செய்யப்படும் எனத் தெரிகிறது. இதன்படி பார்த்தால், இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்வதில் யமஹா மிகவும் நிதானமாக இருப்பதாகவேத் தெரிகிறது.
தற்போது யமஹா நிறுவனம் தைவான் மற்றும் ஐரோப்பாவில் சில எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. எனினும், இவை எதுவும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான உற்பத்திக்கு தயார் நிலையில் இல்லை. இதற்கு காரணம்.. இவற்றின் மிக அதிக விலை ஆகும்.
இந்தியாவில் அறிமுகம் செய்ய முற்றிலும் புது மாடலை உருவாக்கி, அதன் விலையை மிகவும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் யமஹா நிறுவனம் உள்ளது. மேலும் இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்வது அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் யமஹா நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.
கடந்த மாதம் யமஹா நிறுவனம் டீலர்களுடன் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் NEO’s மற்றும் யமஹா E01 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை காட்சிப்படுத்தி இருந்தது. அந்த வகையில், இரு மாடல்களும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இவை தவிர அதிக ரேன்ஜ் வழங்கும் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உருவாக்கும் பணியிலும் யமஹா ஈடுபட்டு வருகிறது.